பாஜகவில் இருந்து யூடர்ன்.. திமுகவிற்கு மீண்டும் வந்தது ஏன்? கு.க.செல்வம் விளக்கம்
சென்னை: திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், ஏன் பாஜகவில் இருந்து விலகினேன் என்பது குறித்து விளக்கியுள்ளார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தவர் கு.க.செல்வம்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்குத் தராததால் அதிருப்தி அடைந்த இவர், கடந்த 2021இல் பாஜகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைந்தார்
இந்நிலையில், கு.க. செல்வம் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் மீண்டும் திமுகவில் இணைந்தார். மேலும், அவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏன் பாஜகவில் இருந்து விலகினேன் என்றும் விளக்கியுள்ளார்.

கு. க. செல்வம் பிரஸ் மீட்
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கு. க. செல்வம், "பாஜகவில் இருந்து மீண்டும் தாய்க் கழகத்திற்குத் திரும்பியுள்ளேன். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற தமிழக எம்பிகளை உள் துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க மறுத்தார். கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் கனவை நீட் தடுக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவில்லை.

காரணங்கள்
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மிகவும் காலதாமதமாக விடுவிக்கின்றனர். விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. கொரோனா நிவாரண நிதியைக் கூட தமிழ்நாட்டிற்குத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் தொடர்ந்து இடைஞ்சல் தருகிறார். அவர் வாபஸ் பெற வேண்டும்.

சிறுபான்மை மதத்தினர் தாக்குதல்
அதேபோல நாட்டில் சிறுபான்மை மத்த்தினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கண்டித்துத் தான் இப்போது நான் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளேன். குடும்பத்தில் அண்ணன் தம்பிக்கு இடையே சின்ன பிரச்சினை ஏற்பட்டால், எப்படி வெளியே செல்வார்களோ, அதுபோலத் தான் நான் சென்றேன். இப்போது மீண்டும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன்.

பாஜகவுக்கு இருண்ட காலம்
கடந்த 9 மாத காலமாகச் சிறப்பான ஒரு ஆட்சியை திமுக வழங்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக பாஜகவின் மோசமான நடவடிக்கைகளைக் கண்டு, இப்போது நான் மீண்டும் திமுகவுக்குத் திரும்பியுள்ளேன். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பணியாற்றுவேன். தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகவுக்கு இருண்ட காலம் தான். 10 ஆண்டுகள் கடந்தாலும் இங்கு திமுக ஆட்சி தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications