குன்றத்தூர் அபிராமி வழக்கில் தீர்ப்பு எப்போது? பாலில் தூக்க மாத்திரை போட்டு குழந்தைகளை கொன்றாரே!
சென்னை: கேரளாவில் காதலனை கொலை செய்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவங்களுக்கு முன்பு நடந்த குன்றத்தூர் அபிராமி வழக்கில் தீர்ப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரளா பாறசாலையில் வேறு ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது காதலனுக்கு விஷம் கலந்து கொடுத்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் 2022 ஆம் ஆண்டு நடந்தது.

அது போல் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு தூக்கு தண்டனை விதிக்குமாறு மேற்கு வங்க மாநில அரசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு 2024ல் நடந்தது. இப்படிப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு கள்ளக்காதலனுக்காக குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூக்கத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற குன்றத்தூர் அபிராமி வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் அபிராமி. 30 வயதான இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தார். இவருடைய கணவர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய், கார்னிகா ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர்.
அபிராமி தன் பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சென்று வந்துள்ளார். சில நேரங்களில் கடைக்கு போன் செய்து ஆர்டர் செய்தும் பிரியாணியை சாப்பிட்டு வந்தார்.
அவ்வாறு ஆர்டர் செய்யும் போதெல்லாம் சுந்தரம் என்பவர்தான் பிரியாணியை கொண்டு வந்து கொடுப்பார். இந்த பழக்கத்தால் தான் அபிராமிக்கு சுந்தரத்தின் மீது காதல் எழுந்தது. இதனால் கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இது விஜய்யின் காதுகளை எட்டியது. இதனால் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. விஜய்யின் கெடுபிடியால் சுந்தரத்துடன் போனில் கூட பேச முடியாத நிலை அபிராமிக்கு ஏற்பட்டது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களை பார் என அடிக்கடி விஜய், அபிராமிக்கு அறிவுரை கூறி வந்துள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் நமது கள்ளக்காதலுக்கு குழந்தைகள்தான் எதிரி என நினைத்த அபிராமி, குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் சந்தோஷமாக வாழலாம் என முடிவு செய்திருப்பார் போல! இதனால் 2018 ஆம் ஆண்டு சுந்தரத்திடம் சொல்லி தூக்க மாத்திரை வாங்கியுள்ளார். அதை இரவு தூங்க செல்லும் முன் குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் குழந்தைகள் காலை வரை தூங்கிக் கொண்டிருந்தனர். கணவர் விஜய் வேலைக்கு சென்ற பிறகு, அவர்களது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி சுந்தரத்துடன் வந்துவிட்டார். இதுகுறித்து விஜய்யின் புகாரின் பேரில் போலீஸார் சுந்தரத்தையும் அபிராமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது இருவரும் புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் அவர்களது வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications