குஷ்பு காங்கிரசிலிருந்து விலக காரணம் யார் தெரியுமா? கொந்தளிக்கும் கோபண்ணா
சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பு இன்று அறிவித்த நிலையில், அவரது முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா கடுமையாக விளாசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த 7 வருடங்களாக இருந்த குஷ்பு, திடீரென நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில்தான், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கட்சி உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலர், தன்னை காங்கிரசில் அடக்கி வைத்ததாக குஷ்பு அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

குஷ்பு விலக யார் காரணம்
அதேநேரம், சோனியா காந்தி மீதான மரியாதை அப்படியே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஊடக பொறுப்பாளர், கோபண்ணா இதுகுறித்து கூறியதாவது: காங்கிரசிலிருந்து குஷ்பு விலக அவர் கணவர் சுந்தர்.சி காரணம். பாஜகவிடம் தனது கொள்கையை அடகு வைத்துவிட்டார் குஷ்பு. ஏற்ற கொள்கையை, விட்டுக் கொடுத்துவிட்டு, நேர் எதிர் கொள்கைக்கு பலியாகியுள்ளார். இவ்வாறு கோபண்ணா தெரிவித்தார்.

அழகிரி வந்த பிறகுதான்
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, முன்னாள் மேயரான, கராத்தே தியாகராஜன் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தவரை, எல்லாம் நன்றாகப்போனது. குஷ்புவிற்கு உரிய அந்தஸ்து தரப்பட்டது. ஆனால் கட்சி தலைவராக அழகிரி வந்தபிறகுதான் இப்படி எல்லாம் நடக்குது.

முருகன் வேகம்
குஷ்பு காங்கிரசை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் வந்ததுமே, உடனே அவரை வீட்டுல போய் பார்த்திருக்கனும். அவர் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்திருக்க வேண்டும். நைனார் நாகேந்திரன் பாஜகவிலிருந்து விலகி, திமுகவில் சேரப்போகிறேன்னு சொன்னதும் கொரோனா தொற்று காலத்திலும், பாஜக தலைவர் எல்.முருகன், நைனார் வீட்டுக்கு நேராக போனார். அவரை சமாதானம் செய்தார். அதுபோல அழகிரி போயிருக்க வேண்டும். இவ்வாறு கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

ஜெயக்குமார் மகிழ்ச்சி
இதனிடையே, குஷ்பு பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. எனவே, தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுக கூட்டணிக்காக குஷ்பு பிரச்சாரம் செய்ய வாய்ப்பு அமைந்துள்ள நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications