40க்கும் அதிக இந்தியர்களை கொன்ற குவைத் தீவிபத்து .. ஸ்டாலின் இரங்கல் -உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த 50 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இதில் 40க்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்று சொல்லப்படும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் வரை பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் முதல்வர் ஸ்டாலின் இரங்ல் தெரிவித்து உதவி எண்களை அறிவித்துள்ளார்.
குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த அடுக்குடிமாடி குடியிருப்பு என்பது கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இதன் உரிமையாளர் பெயர் கேஜி ஆபிரகாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று திடீரென்று தொழிலாளர்கள் தங்கியருந்த குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது.
இதுபற்றி அறிந்தவுடன் உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கட்டுக்குள் வரவில்லை. இந்த தீவிபத்தில் மொத்தம் 50 பேர் வரை பலியானதாகவும், மேலும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி அறிந்தவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இன்று காலையில் குவைத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கேவி சிங் சென்றார். தற்போது பலியானவர்களின் உடல்கள் என்பது அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தீவிபத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 3 பேர் வரை பலியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்துக்கான மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் குவைத் தீவிபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 '' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications