2021-இல் தமிழக சட்டசபையில் பாஜகவினர் இடம்பெறுவர்.. புதிய தலைவர் எல் முருகன் உறுதி
சென்னை: 2021-இல் தமிழக சட்டசபையில் பாஜகவினர் இருப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்கள் கழித்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவராக எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல்லை சேர்ந்தவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.

இவர் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் புதிய தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை எம்பி இல கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது எல் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் என்னை மாநிலத் தலைவராக நியமனம் செய்த நட்டா, அமித்ஷா, மோடி, அனைத்து பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி.

பத்திரிகை நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பிரதான கட்சியாக பாஜகவை கொண்டு செல்ல உள்ளோம்.
அனைத்து மக்களிடமும் கட்சியை கொண்டு செல்வோம். நாங்கள் நேர்மையான அரசியலை செய்து வருகிறோம் என்றார். ரஜினியை பயன்படுத்திக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். பாஜகவில் இருந்தால் சாதாரண தொண்டரும் மிகப் பெரிய தலைவராக முடியும். வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.

இதுதான் எனது இலக்கு. தமிழக மக்கள் சார்ந்த விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications