பொங்கல் பண்டிகை... சொந்த ஊர் பயணம்.. பேருந்துகள், ரயில்களில் அலைமோதும் கூட்டம்
சென்னை:பொங்கலை கொண்டாட சென்னையில் இருந்து இதுவரை ஒன்றரை லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு செல்ல 1.67 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழாவை கொண்டாட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். கோவை,மதுரை, நெல்லை, திருச்சி ஆக நகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
முன்பு இல்லாத வகையில் மெகா விடுமுறையாக பொங்கல் பண்டிகைக்கு கிடைத்துள்ளதால் ஏற்கனவே பயண திட்டத்தை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தவர்களுக்கு எவ்வித சிக்கலும் எழவில்லை.இறுதி நேரத்தில் முடிவு செய்து... நாமும் ஊருக்கு போகலாம் என்ற நினைத்தவர்களின் பாடுதான் சற்றே திண்டாட்டம் எனலாம்.

அலைமோதிய மக்கள்
சென்னையை பொறுத்தவரை வழக்கமாக விடுமுறை நாட்களிலேயே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தொடர் விடுமுறை என்பதால் நகரில் இருக்கும் ஜனத்தொகையை விட.... பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள மக்கள் எண்ணிக்கை தான் எக்கச்செக்கம்.....

துவங்கியது பொங்கல் பயணம்
குழந்தைகளுடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் அவரவரின் சூழ்நிலைக்கு ஏற்ப... பயணத்தை வடிவமைத்துக் கொண்டுள்ளனர். கைகளில் பைகள், துணிமணிகள், உறவினர்களுக்கான அன்பளிப்புகள் என ஏகபோக மகிழ்ச்சியில் பயணத்தை துவக்கியுள்ளனர்.

சிறப்பு பேருந்துகள்
பயணிகளின் வசதிக்காக.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 250 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில், சென்னையிலிருந்து 11ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது.

மாவட்டங்களுக்கு பேருந்துகள்
வரும் 14ம் தேதி வரை இயக்கப்படவுள்ள 14,263 பேருந்துகளில் 11ம் தேதி 3,529 பேருந்துகளும், 12ம் தேதி 3,741 பேருந்துகளும், 13ம் தேதி 3411, 14ம் தேதி 3582 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதே போன்று பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாதிக்கப்படும் போக்குவரத்து
சென்னை கோயம்பேடு பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனை தவிர்க்கும் வகையில், மாதவரம், தாம்பரம், பூவிருந்தமல்லி ,கேகேநகர் பேருந்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெருங்களத்தூரில் கூட்டம்
என்னதான் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும் அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையை பொறுத்தவரை... கோயம் பேடு எந்த அளவுக்கு பயணம் கூட்டத்தால் திணறுமோ... அதற்கு இணையாக இருப்பது பெருங்களத்தூர் பகுதி.

நள்ளிரவை தாண்டி பயணம்
இரவு நேர பேருந்துகளில் இடம் கிடைக்காமல்.. காலையில் புறப்படலாம் என்று எண்ணி பேருந்து நிலையம் வந்தவர்களுக்கு அதிர்ச்சி. இன்னும் கூட்டம் காணப்படுவதோடு... தனியார் பேருந்துகளில் கட்டண அறிவிப்பை கேட்டு மயங்காத குறைதான். ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அலைமோதும் கூட்டம்... பயண கட்டணம் அதிகரிப்பு... பயண அலுப்பு என சிரமங்கள் பல இருந்தாலும் சொந்த ஊரில் பண்டிகை கொண்டாட்டம் என்றால் தித்திப்புதான்... கரும்பை விட!!












Click it and Unblock the Notifications