ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்?.. லட்சுமி வேலு விளக்கம்
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என்ற கேள்விக்கு மக்கள் மன்றத்தின் வடசென்னை மகளிரணி செயலாளர் லட்சுமி வேலு விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி லட்சுமி வேலு ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், என் பெயர் லட்சுமி வேலு, ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்தேன்.
தற்போது திமுகவில் இணைந்துள்ளேன். நான் ஆரம்பத்திலிருந்தே ரஜினி ரசிகர்தான். எனது கணவர், எனது குழந்தைகள் என குடும்பமே ரஜினி ரசிகர்கள்தான்.

வடசென்னை
ரஜினி மக்கள் மன்றத்தில் நாங்கள் அனைவருமே ஒரு குடும்பமாக இருந்தோம். தலைவர் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தவுடன் வடசென்னையில் இறங்கி களப்பணியை நாங்கள் ஆற்றினோம். அதன் பின்னர் ரஜினி திடீரென அரசியலுக்கு வரவில்லை என சொன்னதும் மன வேதனை அடைந்தோம்.

சமூக சேவை
எனினும் மக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் திமுகவில் இணைந்துள்ளேன். ரஜினி அரசியலுக்கு வராதது ஏமாற்றம் என சொல்ல முடியாது. அவருடைய உடல்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் வீட்டிலேயே ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், நாம் எந்த காரியத்திலும் இறங்குமாறு அவரை கட்டாயப்படுத்த மாட்டோம். அது போல்தான் இதுவும்.
ரசிகை
அரசியலுக்கு எப்போதும் வேண்டுமானாலும் அவர் வரலாம். ஆனால் அவரது உடல் நன்றாக இருந்தால்தான் அதை செய்ய முடியும். வரும் சட்டசபை தேர்தலில் எனக்கு தெரிந்து ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார். ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவரது ரசிகையாக நான் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மாற்று கட்சி
திமுகவில் இணைவதை ரஜினி மக்கள் மன்ற நண்பர்கள் தடுத்தார்கள். ஆனாலும் நான் இணைந்துவிட்டேன். ரஜினியை பார்த்துள்ளேன். 38 மகளிரணி செயலாளர்களில் கடைசியாக வடசென்னைதான். வடசென்னை லட்சுமி வாங்கம்மா என ரஜினி என்னை அழைத்தார். அப்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளுங்கள் என ரஜினி அறிக்கையில் தெரிவித்துவிட்டதால் நிறைய பேர் மாற்று கட்சியில் இணைவார்கள் என லட்சுமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications