வண்டலூரில் நிலத்தை ஏழைகளுக்கு கொடுக்காமல் புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதா..? ஐகோர்ட்டில் வழக்கு
Recommended Video
சென்னை: சென்னை வண்டலூரில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 2016-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 44 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடி செலவில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரியில் தமிழக முதல்வர் பழனிசாமி பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்

இந்நிலையில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், தமிழக அரசு புதிய பேருந்து நிலையம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நில உரிமையாளர்களிடம் உள்ள உபரி நிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க 1961-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 96 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்காமல் பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய பேருந்து நிலையம் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என நரேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நிலத்தை ஏழைகளுக்கு கொடுக்காமல் பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்குவது நில உச்சவரம்பு சட்டத்தை பாழாக்கும் செயலாகும். ஆகவே நில உச்சவரம்பின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications