மோசடி புகார்...திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வழக்கு...சிபிசிஐடி நடவடிக்கைக்கு இடைக்கால தடை!!
சென்னை: மோசடி புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். தற்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வாங்கினேன்.
அந்த நிறுவனம் தனக்கு உரிமையானது என்று குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீண்டும் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய விலக்கு அளிக்க வேண்டும்'' என்று கோரி இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் உள் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார் வரும் 24ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் இது குறித்து சிபிசிஐடி போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளியில் மூன்றாவது மொழியாக இந்தி ? கோவை மாநகராட்சி ஆணையர் மறுப்பு
வழக்கின் இறுதி விசாரணை வரும் 31-ஆம் தேதி நடத்தப்படும் என்றும், அது வரை இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதே புகார் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.