லாஸ்ட் சான்ஸ்! என்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தவறிவிட்டீர்களா? நாளை வரை அவகாசம்!
சென்னை: பொறியியல் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக் இடங்களில் சேர்வதற்கு 2,49,918 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ள நிலையில், விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவற விட்டவர்களுக்காக நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு கடந்த மே 6 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து விண்ணப்ப பதிவு துவங்கியது. பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. மே 6 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தி வந்தனர். மேலும், தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வந்தனர்.
அதன்படி, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6 ஆம் தேதி மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
தற்பொழுது மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 10 மற்றும் ஜூன் 11 என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரியப்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டு, அதன் பிறகு ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனிலேயே நடைபெறும். பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்படும்.
கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் பொறியியல் படிப்புகளின் பக்கம் திரும்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications