இதுவரை பொங்கல் பரிசு வாங்கலயா? இன்றே கடைசி நாள்.. ரேஷன் கடைக்கு போங்க.. வெளியான முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்று (ஜனவரி 18) கடைசி நாள். பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றதால் வாங்காதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் 75%க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக, பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதே நேரத்தில் இலவசமாக வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு கடந்த 9ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 9 ஆம் தேதி அன்று சைதாப்பேட்டை நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
கடந்த, 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அன்று ஒருநாள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று வரை, எட்டு நாட்கள், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நடைபெற்றுள்ளது. இதுவரை சுமார் 75% ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏராளமானோர், பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊர்களுக்குச் சென்றுவிட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை. இந்நிலையில், விடுமுறை முடிந்து வந்தாலும் ரேசனில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை வரை, பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications