இதுவரை இல்லாத ஆதரவு... தனி சக்தியாக உருவெடுக்கிறாரா சீமான்? - அசர வைக்கும் 'ரிப்போர்ட்'
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை மிகவும் சீரியஸாகவே எதிர்நோக்கி காத்திருக்கிறது நாம் தமிழர் கேம்ப்.
Recommended Video
நாளை (மே.2) தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும். கருத்துக்கணிப்புகள், வியூகங்கள், கூட்டிக் கழித்துப் பார்த்த கணக்குகள் என அனைத்து ஆங்கிளிலும் பதிலாய் தெரிவது மு.க.ஸ்டாலின் மட்டுமே.
திமுக எப்படியும் வென்றுவிடும் நம்பிக்கையில், அமைச்சரவை வரை தயார் செய்து, ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது அறிவாலயம். அதேசமயம், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் முடிவுகளுக்காக கழுகு போல காத்திருக்கிறது.

சாதகமான முடிவு
கலைஞர் கருணாநிதி இல்லாத திமுக, ஜெயலலிதா இல்லாத அதிமுக, கணிக்க முடியாத மக்கள் நீதி மய்யம், சரண்டரான தேமுதிக, ஆளுமை இல்லா அமமுக, ரஜினி இல்லாத போர்க்களம் என்ற பிளஸ், மைனஸ் கலந்த இந்த தேர்தல் களத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் சீமான் நம்புகிறாராம்.

பெரும் மாற்றம்
இதன் வெளிப்பாடாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக இருந்தும், சீமானிடம் இருந்து அப்படியொரு 'கான்ஃபிடண்ட்' தேர்தல் ரிசல்ட் அறிக்கை வந்திருக்கிறது என்கின்றனர் தம்பிகள். முன்னதாக, சீமான் தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதத்தில், "நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின்பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மாபெரும் வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பதில் சீமான்
எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் சீமான் இருக்கிறார் என்பது குறித்து நாம் மேற்கொண்ட துருவல்களில் தம்பிகள் சிலர் நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அதில், "அண்ணன் சீமானுக்கு நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி இளம் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளார்கள் என்பது எங்களது தேர்தலுக்கு பிறகான சர்வேயில் தெரிய வந்துள்ளது. நீங்களே, உங்கள் ஊரில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்திற்கோ, டவுனுக்கோ சென்று, படித்த இளம் தலைமுறையினர் 5 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்டுப்பாருங்கள். பதில், 'சீமான்' என்று தான் இருக்கும்.

அதிர்ச்சி உறுதி
இந்த சர்வே அடிப்படையிலேயே எங்கள் அண்ணனின் அறிக்கையும் அமைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கூட திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு எங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. கொங்கு மண்டலம், தென் மண்டலம் என்று பரவலாக இளம் தலைமுறையினர் வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

2026 தேர்தல்
வெற்றிப் பெற்று அண்ணன் சீமான் ஆட்சி அமைப்பாரோ இல்லையோ, வாக்குகளை பிரித்து, இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று, டாப் கட்சிகளின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கப் போவது உறுதி. வாக்கு சதவிகிதம் எவ்வளவு பெறப் போகிறோம் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் நீட்சி 2026 தேர்தலில் எதிரொலிப்பதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள். அப்போது நாங்கள் அசைக்க முடியாத சக்தியாக இருக்கப் போகிறோம். அதற்கான வெள்ளோட்டம் இந்த தேர்தல்" என்று முடித்தனர்.
இவர்கள் சொல்வது போல், இளைய தலைமுறை ஆதரவாளர்கள் அக்கட்சிக்கு கிடைக்குமா? சீமான் தனி ஆளுமையாக உருவாகுவரா?, வாக்கு சதவிகிதம் அதிகம் கிடைக்குமா? உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்குமான பதில் நாளை தெரிந்துவிடும்.











Click it and Unblock the Notifications