ரஜினிகாந்த் சிறந்த தலைவர்.. அரசியலுக்கு வராமல் போனது வருத்தம்தான்.. சொல்வது மனைவி லதா ரஜினிகாந்த்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனது தமக்கு வருத்தமாக இருப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் திரைப்பட பைனான்ஸ் மோசடி வழக்கு ஒன்றுக்காக லதா ரஜினிகாந்த் பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். 2014-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட். இந்த நிறுவனத்துக்கு ஆட் பீரோ நிறுவனம் ரூ6.2 கோடி கடன் கொடுத்தது. இந்த கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தவர் லதா ரஜினிகாந்த்.
மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலையில் ஆட் பீரோ நிறுவனம் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் ஆஜரானார். இவ்வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.

பின்னர் சென்னை திரும்பிய லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோச்சடையான் பட வழக்கு பற்றி விவரித்தார். மேலும் கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்த உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் லதா ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தை நான் ஒரு சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அவர் அரசியலுக்கு வராமல் போனது எனக்கு வருத்தம்தான். அதே நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்காக சொல்லும் காரணமும் ஏற்க கூடியதுதான். அதை நாம் மதிக்க வேண்டும் என்றார் லதா ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் 1980, 1990களில் அரசியலுக்கு வருவதாக பேசப்பட்டு பரபரப்பு கிளம்பியது. ஒருவழியாக 2017-ல் அதாவது ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது; அதை ஆன்மீக அரசியலால் நிரப்புவேன் என கூறி தனி கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த் தெரிவித்த பல கருத்துகள் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தன. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் அரசியலுக்கு வரவே இல்லை என அந்தர் பல்டி அடித்து குட்பை சொல்லிவிட்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications