மருத்துவமனையாகிறதா கிண்டி ராயல் லீ மெரிடியன் ஹோட்டல்?.. வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த்கேர் குரூப்!
சென்னை: சென்னையின் லீ மெரிடியன் ஹோட்டல் ரூ 423 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹோட்டலானது மருத்துவமனையாகவும் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கத்திபாரா சந்திப்பில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல். கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலானது தொடங்கப்பட்டது. சுமார் 3.44 ஏக்கர் கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தம் 240 அறைகள் உள்ளன.
இந்த 240 அறைகளில் 112 அறைகள் சாதாரண அறைகள், 57 டீலக்ஸ், 41 ராயல் கிளப் படுக்கை அறைகள், 22 டீலக்ஸ் சூட்ஸ், 7 எக்ஸிகியூட்டிவ் சூட்ஸ், 3 ராயல் சூட்ஸ், ஒரு பிரசிடென்சியல் சூட்களை கொண்டது.

12 ஹால்கள்
ஒரே நேரத்தில் 1500 பேருக்கு விருந்து கொடுக்கும் வகையில் டைனிங் அறையும் உள்ளது. இங்கு 12 கான்பிரன்ஸ் ஹால்கள் உள்ளன. 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. அவை நவரத்னா, கிளான்ட்ரோ, காயல் ஆகியவை ஆகும். இதில் நவரத்னா ராயல் இந்திய உணவுகளும் கிளான்ட்ரோவில் 24 மணி நேரமும் சர்வதேச உணவுகளான கான்டினென்டல், சைனீஸ், இந்தியன், தென்கிழக்காசிய உணவு வகைகளும், ராயலில் கடல் வாழ் உணவுகளும் கிடைக்கும்.

பெரிய பார்கள்
அது போல் டோம் பார், பிளேம் லீ கிளப், லீ கவுர்மான்டைஸ் ஆகிய பார்களும் உள்ளன. நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் மிகப்பெரிய ballroom உள்ளது. 1600 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஹோட்டல் தற்போது வெறும் ரூ 423 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஎம்
லீ மெரிடியன் ஹோட்டலை நடத்தி வரும் அப்பு ஹோட்டல் நிறுவனத்தை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்கிக் கொண்டது. இதனால் சென்னை மற்றும் கோவையில் உள்ள இரு ஹோட்டல்களையும் எம்ஜிஎம் வாங்கியுள்ளது. உரிமையாளரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த ஹோட்டல் மருத்துவமனையாக மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையாக மாற்றம்?
கிண்டியில் முக்கிய இடத்தில் உள்ள ஹோட்டலை மருத்துவமனையாக மாற்ற எம்ஜிஎம் முடிவு செய்துள்ளதாகவும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலாகவே இயங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications