’கேம் சேஞ்சர்’ ஆன இடது சாரிகள்! தமிழக அரசியலையே திருப்பிப் போட்ட ‘தோழர்கள்’.! 1996 ரிட்டர்ன்ஸ்?
சென்னை: தமிழக அரசியலில் ஆட்சியமைப்பதற்கான பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை, "ஆட்சியில் பங்கேற்க மாட்டோம்; ஆனால் வெளியிலிருந்து ஆதரவு அளிப்போம்" என்று தெளிவாக அறிவித்துள்ளன.
இதன் மூலம், தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பதில் இடதுசாரிகள் கேம் சேஞ்சராக உள்ளன. தமிழக அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் தோழர்கள் கடந்த காலங்களில் கிங் மேக்கராக பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் பலம் இல்லாததால், விஜய் தலைமையிலான கட்சி தொடர்ந்து ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இடதுசாரிகள்
திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதால், எந்த அணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் தொங்கு சட்டமன்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், முதலில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. அதன்பின்னர், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகளும் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
வெளியாதரவு அரசியல்
இதன்மூலம், விஜய் தலைமையிலான தவெக அரசு அமைப்பதற்கான வாய்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது. இருப்பினும், இன்னும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், அரசியல் பரபரப்பு தொடர்கிறது. இடதுசாரி கட்சிகள் வெளியாதரவு வழங்குவது இந்திய அரசியலில் புதிதல்ல. பல முக்கியமான அரசியல் மாற்றங்களின் பின்னணியிலும் இடதுசாரிகளின் இந்த "வெளியாதரவு அரசியல்" முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக, 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் தற்போது மீண்டும் பேசப்படுகிறது.
ஐக்கிய முன்னணி அரசு
அந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைத்தாலும், அட்டல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு வெறும் 13 நாட்களிலேயே கவிழ்ந்தது. அதன் பின்னர் ஜனதாதளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு உருவானது. அப்போது சிபிஎம் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கும் வாய்ப்பு வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த பொறுப்பை ஏற்க கட்சியின் மத்தியக்குழு மறுத்ததால், இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அந்த அரசில் சிபிஐ மட்டும் பங்கேற்று, இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றது இந்திய அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு முழு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிபிஎம் மற்றும் சிபிஐ உள்ளிட்ட இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தனர். ஆனால், அந்த ஆதரவுக்கு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்தனர். குறிப்பாக, "குறைந்தபட்ச செயல் திட்டம்" என்ற அடிப்படையில் அரசை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சிபிஐ, சிபிஎம்
அந்த காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), வன உரிமைச் சட்டம் போன்ற பல முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் இடதுசாரிகளின் அழுத்தத்தால் உருவானவை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழக அரசியலிலும் இதேபோன்ற வரலாறு உள்ளது.
1996 ரிட்டர்ன்ஸ்
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததன் மூலம் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அமைந்தது. அந்த அரசு முழு காலத்தையும் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதே மாதிரியான சூழல் தற்போது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளது.
தவெக அரசு
விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது, வெறும் அரசியல் முடிவு மட்டுமல்ல; எதிர்கால அரசியலையே தீர்மானிக்கும் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விசிக எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்தாலும், அறுதி பெரும்பான்மை கணக்கில் இன்னும் சிக்கல் நீடிப்பதால், அடுத்த சில நாட்கள் தமிழக அரசியல் பரபரப்பு மிகுந்ததாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications