ஆக்ஷனுக்கு ரெடி! ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு.. என்.ஆர்.இளங்கோ பரபர தகவல்!
சென்னை: ஆளுநர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்; உத்தரவு நிறுத்தி வைப்பு ஏன் என்பது குறித்து விரிவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்து, அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்பதாக கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications