அப்பு விட்ட அழகிரி! கலவரக் காடான காங்கிரஸ் ஆபிஸ்! அண்ணன் தம்பி சண்டை என்கிறார் லெனின் பிரசாத்!
சென்னை : சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வு அண்ணன் தம்பி சண்டை எனவும், பாஜகவில் நடைபெற்றது பெண்ணை இழிவுபடுத்தும் சம்பவம் என புதுக்கோட்டையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒருபுறம் ஆலோசனைக் கூட்டம் மறுபுறம் போராட்டம் என தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

தொண்டர்களுக்கு பளார்
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தில், திடீரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது. அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய மூன்று பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். மேலும் தன்னிடம் பேச வந்த நிர்வாகிகள் அழகிரி பளார் என அறைந்தார். இந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சியில் பரபரப்பு
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரனே காரணம். அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரிக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெனின் பிரசாத்
சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வு அண்ணன் தம்பி சண்டை எனவும், பாஜகவில் நடைபெற்றது பெண்ணை இழிவுபடுத்தும் சம்பவம் என புதுக்கோட்டையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மற்ற கட்சிகளைப் போல் காங்கிரஸ் கட்சி கிடையாது தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு பெற முடியும்.

அண்ணன் தம்பி சண்டை
நிர்வாகிகள் நன்றாக செயல்பட்டால் மட்டுமே பதவி இருக்க முடியும் இல்லையென்றால் அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான சுற்று பயணம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்த பிரச்சனைக்கு ஒரு சமூக தீர்வு விரைவில் காணப்படும். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது ஒரு குடும்ப சண்டை. அண்ணன் தம்பி சண்டை. ஆனால் பாஜகவில் நடந்தது என்பது பெண்ணை இழிவுபடுத்தும் செயல்
அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

கார்த்தி சிதம்பரம்
சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பிரச்சனை தொடர்பாக அதற்கு பின்னால் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் டெல்லி தலைமை விசாரணை செய்வதற்காக அனைவரையும் டெல்லிக்கு வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தன்னை நியமித்தால் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறியிருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் யாரையும் முன் நிறுத்தாது அகில இந்திய தலைமை யாரை தலைவராக நியமிக்கிறதோ அவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும். திமுக காங்கிரஸ் கட்சி உறவு சுமூகமாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications