கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ரிலீஸ் ஆனது லியோ.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: தமிழகத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் லியோ திரைப்படம் அதிகாலை 4 மணிக்கே வெளியானது. எல்லைப் பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான விஜய் ரசிகர்கள் படம் பார்க்க திரண்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லியோ.. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. லியோ திரைப்படம் இன்று முதல் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது.

லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிடலாம், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு இன்று வெளியாகிறது.
எனினும், கேரளா, ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களில் லியோ திரைப்படம் வெளியானது. கேரளாவில் மட்டும் 655 திரையரங்குகளில் படம் வெளியானது. குமரி- கேரளா எல்லையில் உள்ள இரண்டு திரையரங்குகளிலும் லியோ வெளியானது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பலரும் அதிகாலை காட்சியை பார்க்க கேரளாவுக்கு படையெடுத்தனர்.
ஆந்திராவின் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 5 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. தமிழகத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலங்களுக்கு சென்று லியோ படத்தை பார்க்க முடிந்தது. படம் பட்டையை கிளப்பும் வகையில் இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவம் செய்து இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications