“முதல்ல உங்க எம்.பிக்களை தொகுதிக்கு போக சொல்லுங்க”.. முதல்வர் ஸ்டாலினிடம் சொன்ன தமிழிசை
சென்னை: "திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில் வாக்களித்த தொகுதி மக்களை சந்திக்க சொல்லுங்கள். பின்பு மற்ற மாநில முதல்வர்களை சந்திக்கலாம்" என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார்.
திமுக, லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் கூட்டம், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் நம் சார்பில் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள். ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை.
திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள். முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களைச் சந்திக்கலாம்.
முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க.. பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்... தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க... இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.
மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்... அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications