ராகுல் காந்திக்கு உதயநிதி வாழ்த்து.. நாடாளுமன்றத்தில் மீண்டும் "இந்தியா”வின் குரலாக ஒலிக்கட்டும்!
சென்னை: ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி. I.N.D.I.A-வின் குரலாக ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் எம்.பியாக நாடாளுமன்றம் செல்ல உள்ளார்.
இந்நிலையில், இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அரசியல் பழிவாங்கல் நோக்கோடு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த மகத்தான தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும். I.N.D.I.A-வின் குரலாக சகோதரர் ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கட்டும்." என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் நோக்கோடு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சகோதரர் @RahulGandhi அவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
— Udhay (@Udhaystalin) August 4, 2023
இந்த மகத்தான தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும்.…
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றது. ராகுல் காந்தியை வயநாடு தக்கவைக்கிறது. குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நமது நீதித் துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications