ஹிஜாப் அனுமதிக்கப்படும் வரை போராடுவோம்! சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்
சென்னை: கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை தொடரும் என்ற அம்மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.
அதனை அடிப்படையாக கொண்டே உள்ளே மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் போராட்டம்
இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவே வன்முறைக் களமாக மாறியது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

போராட்டத்தை தொடங்கி வைத்த புதுக்கல்லூரி மாணவர்கள்
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான உடனே சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு ஹிஜாப் தடைக்கும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மறுநாளும் புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இதேபோல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இதனிடையே சென்னை ஆவடியில் உள்ள ஏ.எம்.எஸ். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று மதியம் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி ஹிஜாப் தடைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஹிஜாபுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம்
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏ.எம்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கையில், "ஹிஜாப் தடையை எதிர்த்து போராடும் மாணவிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஹிஜாப் அணிவது மாணவிகள் உரிமை என்றும் அதை அனுமதிப்பது அரசின் கடமை. கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு விதித்துள்ள தடை வாபஸ் பெறப்படும் வரை கல்லூரியில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்." என்றனர்.












Click it and Unblock the Notifications