"இந்தியா" கூட்டணியில் கழற்றிவிடப்படும் காங்கிரஸ்? எடப்பாடி பழனிசாமி கருத்தால் தேசிய அளவில் பரபரப்பு!
சென்னை: "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் உறவை முறிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் பஞ்சாப்பில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என அம்மாநில முதல்வர் பகவந்த் மானும் அறிவித்திருக்கின்றனர். "இந்தியா" கூட்டணியின் இந்த மோதல்கள் தொடர்பாக அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காங்கிரஸுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உறவை முறிப்பதாக அறிவித்துவிட்டன. உ.பி.யில் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸுடன் மோதிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் விரைவில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. திமுகவிடம் 15 முதல் 18 தொகுதிகளைக் கேட்போம் என்கிறது காங்கிரஸ். திமுகவோ 8 அல்லது அதிகபட்சம் 9 தொகுதிகள் என்பதில் உறுதியாக உள்ளது. திமுக அணியில் பாமக இணைந்தால் காங்கிரஸுக்கு வெறும் 4 தொகுதிகள்தான் திமுகவா தர முடியும். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது கூட்டணி கட்சிகளுக்காக காத்திருக்கும் அதிமுகவுடன் கை கோர்க்குமா? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "இந்தியா" கூட்டணி மோதல்கள் தொடர்பாக வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கருத்துகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: 26 கட்சிகள் வெவ்வேறு கொள்கைகள், கருத்துகளைக் கொண்டவை ஒன்றாக இணைந்துதான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அது எப்படி சரியாக இருக்கும்? ஒவ்வொரு கட்சியின் கொள்கையும் வெவ்வேறாக இருக்கிறது. கருத்துகளும் வெவ்வேறாக இருக்கிறது. அதனடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது என்பது கடினம். அது எதிர்பார்த்த ஒன்றுதான். அது நிறைவேறாது என்பது நன்றாகவே தெரியும்.
இதன்பின்னரும் கூட்டணி அமைக்க முயற்சித்தார்கள். இன்றைய தினம் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. கெஜ்ரிவாலின் கட்சியும் சில மாநிலத்தில் நாங்களும் "கூட்டணியில்" இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இன்னமும் காலம் இருக்கிறது. யார் யாரெல்லாம் வெளியே போறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications