நாம் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது.. ”கல்வியை கெட்டியா பிடிச்சிக்கோங்க” நடிகர் கார்த்தி
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, நாம் நினைக்கின்ற மாதிரி வாழ்க்கையில் எதுவும் நடக்காது. ஆனால் கல்வியை மட்டும் படித்தால் வாழ்க்கையே மாறிவிடும். எனவே கல்வியை கெட்டியாக புடிச்சுக்கோங்க.. அது தான் ரொம்ப முக்கியம்" என்று கூறினார். அரசு உங்களுக்கு இந்த மடிக்கணினி கொடுப்பதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
உலகம் உங்கள் கையில் என்ற தலைப்பில் இன்று கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அறிவியல் ஆய்வாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் கார்த்தி கல்வியை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவர் கூறியதாவது:-
வாழ்க்கை ஒரு டிகிரியோடு முடிந்துவிடாது. வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது அதை எதிர்கொள்ள கல்வி தான் தீர்மானிக்கிறது. நாம் என்ன மாதிரியான முடிவு எடுக்க வேண்டும் என்பதை கல்வியே தீர்மானிக்கும். எனவே கல்வியை மட்டும் விட்டுடாதீங்க.. கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்..
நான் ஒவ்வொரு வருஷமும் கண்ணு முன்னாடி பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கல்வியை படித்துவிட்டால் இந்த வாழ்க்கையே, சமூகமே மாறிவிடும் என்பதை பார்த்து வருகிறேன். நம்மள சுத்தி என்ன நடக்கிறது என்பது முக்கியமாக இருந்து வருகிறது. ஏஐ வளரும் இந்த காலத்தில் உங்களுக்கு இந்த மடிக்கணினி கொடுப்பது ரொம்ப முக்கியமான தருணமாக நான் பாக்கின்றேன்.
இந்த நேரத்தில் தான் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏஐயால் வேலை போயிடும் என சொல்றாங்க.. அப்படி எல்லாம் இருக்காது என நம்புகிறேன்.. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "திராவிட இயக்கத்தை பொறுத்தவரை அறிவு இயக்கம். அறிவியலை கொண்டாடும் இயக்கம். பெரியார் அவர்கள் இனி வரும் உலகம் என்ற பெயரில் உரையாற்றினார். அந்த உரையில் எதிர்காலம் எப்படி இருக்கும்.. அறிவியல் எப்படி இருக்கும் என்று அதில் கூறியிருந்தார்.
எதிர்காலத்தில் ஒரு கருவி வரும்.. அந்த கருவி மூலம் ஒரு இடத்தில் இருந்துகொண்டே கல்வி கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியே இப்போது மடிக்கணினி வழங்கப்பட்டு எல்லா மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.
அவர் அப்போதே தொலைநோக்கு பார்வையோடு சொன்ன ஒவ்வொன்றும் இப்போது அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதனால் தான் கல்வி என்றால் தமிழ்நாடு, தமிழ்நாடு என்றால் கல்வி என தமிழ்நாடு பெயர் பெற்றுக் கொண்டு வருகிறது. நம் தமிழக மாணவர்கள் பல்வேறு இடங்களில் பொறுப்பு வகித்து வருகிறார்கள். தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ தலைவராகியுள்ள விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் இங்கு வந்து இருக்கிறார். அவரை போல இன்னும் நம் மாணவர்கள் சாதனை புரிய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications