காதலுக்கு ‘நோ’ சொன்னதால் மாணவியை குத்தி கொன்ற சம்பவம்.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!
சென்னை: கல்லூரி வாசலில் மாணவியை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மதுரவாயல் ஆலப்பாகம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் கே.கே. நகரில் மீனாட்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அஸ்வினி கல்லூரிக்கு செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார்.

நாளடைவில் அழகேசனின் காதலை அஸ்வினி ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், குடும்பத்தினர் கண்டித்ததால் பின்னர், அழகேசனிடம் இருந்து விலகியுள்ளார் அஸ்வினி. ஆனால், ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத அஸ்வினி வீட்டுக்குள் வந்து, அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அஸ்வினி போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், அழகேசனை கைது செய்தனர். ஜாமினில் வெளியில் வந்த அழகேசன் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினியை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது ஃபாரூக் விசாரித்தார்.
இந்த வழக்கில், அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
தனது காதலை ஏற்காத கல்லூரி மாணவியை கொன்ற கொடூரன் அழகேசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, 'நோ' செல்லும் பெண்களை வஞ்சத்தில் பழி தீர்க்க நினைக்கும் இளைஞர்களுக்கு பாடமாக இருக்கட்டும்.












Click it and Unblock the Notifications