Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓரே வருஷத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.. கல்விக்கடன் தள்ளுபடி.. சீமான் தேர்தல் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். இதில் மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்றும், படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும். இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 49 தலைப்புகளில் வாக்குறுதிகளை சீமான் வெளியிட்டுள்ளார்.

Liquor Shops to Be Closed in One Year Education Loans Waived Seeman s Election Promises

மதுக்கடைகள் மூடப்படும்

இதில் பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும். இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். ஆற்று நீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மேலும் சில வாக்குறுதிகளை இங்கு காணலாம்.

பழச்சாற்றுத் தொழிற்சாலை - அரசு வேலை

இயற்கை முறையில் வளர்க்கப்படும் தக்காளி, மாம்பழம், பப்பாளி, பலா உள்ளிட்ட பழங்கள், பழச்சாறு மற்றும் ஊறுகாய்களாக மாற்றப்படும். இதற்கான தொழிற்சாலைகள் பண்ணைகளுக்கு அருகிலேயே அமைக்கப்படும்.
படிக்காதவர்களுக்குக் கால்நடைப் பண்ணை, இயற்கை உர உருவாக்கம் மற்றும் காய்கறிப் பண்ணைகளில் அரசு வேலை வழங்கப்படும்.

அனைத்தும் இலவசம், குடிநீருக்குக் காசா?

உலக உயிர்களின் மிக முதன்மையான உயிராதாரமான குடிநீரை விற்பனைப் பண்டமாக ஆக்கியதை நாம் தமிழர் அரசு வன்மையாகக் கண்டிப்பதுடன் அதை உலக உயிர்களுக்குச் செய்யும் இரண்டகமாகப் பார்க்கிறது.

நாம் தமிழர் ஆட்சியில் அடிப்படைத் தேவையான குடிநீரைக் காசுக்கு விற்கும் முறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் தொலைக்காட்சிப்பெட்டி, துணி வெளுக்கும் கருவி, கலவையாக்கி, அரைப்பான், மடிக்கணினி, மாதந்தோறும் பண உதவி உள்ளிட்ட பல பொருள்களையும் இலவசமாக வழங்கும் அரசால் தண்ணீரை மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்க முடியாமல் இருப்பதே தண்ணீர் மிக உயர்ந்த சந்தைப் பொருள் என்பதற்குச் சான்று.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்குமான குடிநீர் 2.5 விழுக்காடு மட்டுமே நன்னீராக உள்ளதாகவும், அதிலும் பெரும்பகுதி பனிப்பாறைகளில் அடைபட்டுள்ளதாகவும் குடிநீராகப் பயன்படுத்தக்கூடியது மிகக்குறைவு என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

மணல் கொள்ளைத் தடுப்பு

அரை விரலம் (அங்குலம்) ஆற்றுமணல் உருவாவதற்கு நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒரு நாளைக்கே முப்பதடி ஆழத்திற்கு மேலாக ஆற்று மணலைத் சுரண்டி, 'மணல் கொள்ளை' நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மணல் கொள்ளைக்கு இந்த கொள்கையற்ற திராவிட அரசுகளே வழிவகை செய்கிறது.

மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. மூன்று பருவம் விளைந்த ஆற்றுப்படுகை வறண்ட நிலமாகியிருக்கிறது. அதனால் நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முற்றுமுழுதாகத் தடுக்கும்.

புதிய ஏரிகளுக்குப் பெரும்பாட்டன்களின் பெயர்கள்

கரிகாலச்சோழன்
இராசராசச்சோழன்
அரசேந்திரச்சோழன்
பராந்தகச்சோழன்
ஆதித்த கரிகாலச்சோழன்
குந்தவை நாச்சியார்
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்
போன்ற நமது பெரும்பாட்டன்களின் பெயரில் 500 முதல் 1000 குறுக்கப் பரப்பளவில் புதிய ஏரிகள், கண்மாய்கள் உருவாக்கப்படும்.

அதற்கான நீர்வரத்துக் கால்வாய்கள் வெட்டப்படும். அதன் கரையோரங்களில் பல்வேறு பெரு மரங்கள் நடப்படும். ஆய்வுக்குப் பிறகு, தகுந்த இடங்களில், நூறு குறுக்க நிலங்களுக்கு பத்து குறுக்க பரப்பளவில் ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டுப் புதிய மழைநீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் வேளாண்மை வளப்படுத்தப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

சென்னை நகரத்தின் நீர்த்தேவை

சென்னை மாநகரத்தின் நீர்த்தேவை ஆண்டுக்கு 12 நூற்றுக்கோடி கன அடி (TMC) ஆகும். ஆனால் இங்கு பெய்யும் மழைநீர் அளவோ 17 நூற்றுக்கோடி கன அடி (TMC). அதில் 4 நூற்றுக்கோடி கன அடி (TMC) அளவுகூட ஆண்ட திராவிட அரசுகள் தேக்குவதில்லை. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகளில் படிந்துள்ள வண்டலை அகற்றினால் அவற்றில் கூடுதலாக 15 நூற்றுக்கோடி கன அடி (TMC) தண்ணீரைச் சேமிக்க முடியும். இதன்மூலம் சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். இதற்காகக் பழைய நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மீட்கப்படுவதோடு, மேலும் புதிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளை நாம் தமிழர் அரசு ஏற்படுத்தும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை சரியாகத் தூர்வாரிப் பேணிக்காத்தால் குறைந்தது 200 நூற்றுக்கோடி கன அடி (TMC) தண்ணீரைச் சேமிக்க முடியும். சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் பகுதி ஏரிகள் அனைத்தும் மேலும் ஒரு மாத்திரி (metre) ஆழப்படுத்தப்படும். இதனால் நீர்ப்பிடிப்பும் அதிகமாகும். இத்திட்டம், மற்ற மாநகரங்கள் அருகில் உள்ள ஏரிகளிலும் செயல்படுத்தப்படும். சாலைகளின் இரு ஓரங்களிலும் மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டிகள், செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டு மழைநீர் நேரடியாக நிலத்தடி நீர்மட்டத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+