மதுராந்தகம் அருகே சாலையில் கவிழ்ந்த ‘சரக்கு’ லாரி.. போலீசார் சென்றதும் வேலையை காட்டிய ‘குடிமகன்கள்’
சென்னை: எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பீர் பாட்டில்கள் பள்ளத்தில் விழுந்த நிலையில் அவற்றை குடிமகன்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளி சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வையாயூர் அருகே தனியார் பீர் உற்பத்தி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பீர் ஆலையில் இருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சேமிப்பு கிடங்கிற்கு 1, 500 பெட்டிகளில் 18,000 பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

லாரி மதுராந்தகம் அருகே உள்ள சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆம்னி பஸ், லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது ஆம்னி பேருந்தில் மோதாமல் இருக்க லாரியை இடது பக்கம் லாரி ஓட்டுநர் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பீர் கேஸ்கள் பள்ளத்தில் விழுந்து கிடந்தன.
போலீஸ் பாதுகாப்பு: பீர் பாட்டிலுடன் வந்த லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் தகவல் அப்பகுதி மக்களுக்கு கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த குடிமகன்கள் பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார், பீர் பாட்டில்களை எடுத்துச் சென்றவர்களிடமிருந்து அதனை கைப்பற்றினர்.
தொடர்ந்து பீர் பாட்டில்களை யாரும் எடுக்காதபடி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மதுபான ஆலையிலிருந்து ஊழியர்கள் வந்தனர். அங்கிருந்து வேறொரு லாரியில் மதுபானங்களை ஏற்றிக் கொண்டு சென்றனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தும் கூட மது பாட்டில்களை எடுத்து சென்று மது அருந்திய குடிமகன்கள் மீண்டும் மீண்டும் வந்து பாட்டில்களை எடுத்து சென்றதையும் காண முடிந்தது.
கோணிப்பையில் அள்ளினர்: பெட்டிகள் சேதம் அடைந்து தண்ணீரில் மூழ்கிய பீர் பாட்டில்களை ஊழியர்கள் எடுக்காமல் விட்டனர். இதனால், அங்கேயே நின்ற குடிமகன்கள் போலீசார் சென்றதும், தங்களால் எத்தனை பாட்டில்களை எடுத்து செல்ல முடியுமோ அத்தனை பாட்டில்களையும் கை கால்களில் இடுக்கிக் கொண்டும் சென்றனர். சில குடிமகன்களோ ஒருபடி மேலே சென்று சாக்குடன் வந்து இருந்தனர். கோணிப்பையில் சரக்கு பாட்டிலை அடுக்கிக் கொண்டு முகம் மலர சென்றனர். சிலர் லுங்கிகளில் அள்ளி போட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications