அதிசயமாக இருக்கே.. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட.. புத்தாண்டு மது விற்பனை குறைவாம்.. இதுதான் காரணம்
சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழக அரசையும், டாஸ்மாக்கையும் இரண்டாக பிரித்து விட முடியாது. ஏனெனில் தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான்.
அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 'குடிமகன்'களை கையில் பிடிக்க முடியாது. இந்த நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் பார்த்து, அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுக்கிறது டாஸ்மாக்.
சிங்கார சென்னை டூ Sinkஆகுற சென்னை.. அய்யா மந்திரிமாரே வோட்டு போட்டவங்களை கரை சேருங்க! கஸ்தூரி ட்வீட்
ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நிறைவு பெற்று 2022-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை நேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். வழக்கமாக ஒவ்வொரு புத்தாண்டிலும் மது விற்பனை களைகட்டும் நிலையில் இந்த முறையும் மது விற்பனை ரிக்கார்ட் படைக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட குறைவு
இந்த வசூல் என்பது கடந்த ஆண்டு புத்தாண்டை விட குறைவாகும். ஏனெனில் கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கொரோனா காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாகவும் கனமழை, சபரிமலை சீசன் ஆகியவற்றின் காரணமாகவும் மது விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் எவ்வளவு?
சென்னை மண்டலத்தில் 41.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் 26.52 கோடி ரூபாயும், சேலம் மண்டலத்தில் 25.43 கோடி ரூபாயும் மது விற்பனையாகி உள்ளது. மதுரை மண்டலத்தில் 27.44 கோடி ரூபாயும், கோவை மண்டலத்தில் 26.85 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவும் ஒரு காரணம்
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிபடைக்கும் கொரோனா தொற்று டாஸ்மாக் வருமானத்தையும் கடுமையாக பாதித்தது. பல மாதங்கள் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் அதன்பின்னர் திறக்கப்பட்டன. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு தான் தமிழகத்தில் டாஸ்மாக் பார் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.