வந்து குவிந்த வெள்ள நிவாரண நிதி… தாராள மனசு யாருக்கு? பட்டியல் இதோ..
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பதிப்புக்காகப் பல தனியார் நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. அம்மாவட்டங்களை மீட்டெடுக்க போதுமான நிதியை அளிக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றது.

இந்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிதியைக் காசோலையாக வழங்கி வருகின்றன.
அப்படி எந்தெந்த நிறுவனங்கள் இதுவரை நிதி அளித்துள்ளன. எவ்வளவு தொகை தமிழக அரசுக்குக் கிடைத்துள்ளது என்பதைத் தொகுத்துத் தருகிறோம்.
நேற்று முதலமைச்சர் ஸ்டாலினைக் கோட்டையில் முருகப்பா குழுமம் சார்பாக ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

இந்த நிறுவன பிரதிநிதிகளை அடுத்து ஹுண்டாய் இந்தியா நிறுவனம் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ரூ. 2 கோடியும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ. 2.30 கோடியும் சேர்த்து மொத்தமாக ரூ. 4.30 கோடிக்கான காசோலைகளை வழங்கி இருந்தனர்.
அதேபோல் எல்&டி நிறுவனம் ரூ. 3 கோடியை முதல்வரிடம் நேற்று வழங்கியுள்ளது.

இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து கேப்லின் நிறுவனமும் வி.என்.சி. நிறுவனமும் முதல்வரைச் சந்தித்து தலா ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை அளித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் அன்று TSF குழுமத்தின் இயக்குநர் ஸ்ரீவட்ஸ் ராம் ரூ. 2 கோடியை வெள்ள நிவாரண மீட்பு பணிகளுக்காக வழங்கி இருக்கிறார்.
செட்டிநாடு குழுமம், சன்மார் குழுமம், சக்தி மசாலா நிறுவனம், PSG குழுமம் ஆகியவை தலா ரூ. 1 கோடியை வழங்கி இருக்கின்றனர். அசோக் லேலண்ட் நிறுவனமும் டிவிஎஸ் குழுமமும் தலா ரூ. 3 கோடி அளித்துள்ளனர்
சிம்சன் குழுமம் 1.25 கோடி நிதி அளித்துள்ளது. ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸும் லயன் டேட்ஸ் நிறுவனமும் தலா ரூ 50 லட்சம் வழங்கி இருக்கின்றன.கூடவே எம்.ஆர்.எப் நிறுவனம் ரூ. 3 கோடி நிதியளித்துள்ளது.

டால்மியா குழுமம் போத்தீஸ் நிறுவனம் ஆகியவை சார்பாக தலா ரூ. 1 கோடி அளித்துள்ளனர். சன் குழுமத்தின் சார்பாக ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ரூ. 1.25 கோடி நிதி அளித்துள்ளது.
சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 35,70,000, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 ஆகிய தொகையை மொத்தமாகச் சேர்த்து 1,27,04,500 ரூபாயை வழங்கியுள்ளனர்.
இவர்களைப் போலவே 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள் இருந்தனர். சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு ஒரு மாத சம்பளத் தொகையான ரூ. 1.05 இலட்சத்தை வழங்கி இருக்கிறார்.
மதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சி நிதியும் சேர்த்து மொத்தம் 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் ரூ. 10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதைப்போலவே புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக 11 இலட்சம் வழங்கப் பட்டுள்ளது.
மாற்றுக்கட்சியைச் சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றின் சார்பாக தலா ரூ. 10 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
கடந்த 16 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் ஸ்டாலினைச் சந்தித்து,. 10 இலட்சத்திற்கான காசோலையை அளித்திருந்தார்கள்.

அரசியல்வாதிகளைப் போலவே அரசு ஊழியர்கள் பலரும் நிதி அளித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழ்நாடு நேரடி நியமன முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு இந்திய வனப் பணி சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்க உறுப்பினர்கள்,தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் என அனைவரும் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வரிடம் இதுவரை அளித்திருந்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர் முன்னேற்றச் சங்க உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத் தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை அளித்திருந்தார்கள்.

மேலும் இந்திய மருத்துவ சங்கத்தினர் ரூ. 50 இலட்சமும் தமிழ்நாடு இந்தியக் காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் 9 இலட்சத்து 78 ஆயிரமும் கடல்சார் வாரியத்தின் நிதியிலிருந்து ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பெரிய பெரிய நிறுவனங்களுக்கு இடையில் சில ஆன்மிக தலைவர்களும் வெள்ளத்திற்கு தங்களால் ஆன நிதியை அளித்துள்ளனர். தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் திரு. அப்துல் ரஹ்மான் தலைமையில் ஒரு குழுவினர் ரூ. 30 இலட்சத்திற்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கி இருக்கிறார்கள்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி இருக்கிறார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ரூ. 1 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த திரையுலகமும் மவுனம் காத்துவரும் சமயத்தில் இயக்குநர் அமீர் கடந்த 15 ஆம் தேதி ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை நிவார நிதியாக அளித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட நிதிகளில் ஹைலைட் ஆனது நெல்லையைச் சேர்ந்த சிறுமி தன் உண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்திற்கு அளித்த நிகழ்வுதான். அது குறித்து ஸ்டாலின், "நெல்லையில் சிறுக சிறுகச் சேர்த்த பணத்தையும் #CMPRF-க்குக் கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!" என்று கூறி இருந்தார்.


















Click it and Unblock the Notifications