நோ சான்ஸ்.. மேயர் தேர்தலில் கறார் காட்டும் திமுக.. காங். விசிக, கம்யூனிஸ்டுகளுக்கு செக்கா? -பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை வேகமாக அறிவிக்கும் திட்டத்தில் திமுக உள்ளதாம். இன்று மாலை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கு பின் முக்கிய பல அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிகளை தமிழக கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.
இது அதைவிட மோசமாம்! ஓமிக்ரானையே தூக்கி சாப்பிடும் ஸ்டெல்த் ஓமிக்ரான்.. எக்ஸ்பர்ட்ஸ் எச்சரிக்கை!
25 நாள் பிளான்
நினைத்தபடியே தேர்தல் தேதிகள் ஆளும் திமுக தரப்பிற்கு சாதமாக வந்துள்ளது. தேர்தல் நடக்க ஒரு மாதத்திற்கும் குறைவாகவே கால அவகாசம் உள்ளது. இது எதிர்க்கட்சி தரப்பிற்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். நகராட்சி அளவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதிலும் பெரிய குழப்பம் ஏற்படும். ஆளும் கட்சி என்பதால் திமுக இதை எளிதாக செய்து முடித்துவிடும்.
கூட்டணிகள்
அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கும் இது ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் மேயர் பதவிகள் உள்ளிட்ட மாநகராட்சி, நகராட்சி பதவிகளை திமுகவிடம் பேசி வாங்க போதிய அவகாசம் கூட்டணி கட்சிகளுக்கு இருக்காது. அதற்கெல்லாம் போதிய நேரம் இல்லாத காரணத்தால் திமுக கொடுக்கிற இடங்களை வாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவிடம் அதிக மாநகராட்சி, நகராட்சி பதவிகளை கேட்போம் என்று சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி முதல் ஆளாக பேட்டி அளித்தார்.
வாய்ப்பு இல்லை
ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை திமுக அதிக அளவில் இடங்களை கொடுக்க வாய்ப்பு குறைவு.. கண்டிப்பாக கட்சி தலைமை கறார் காட்டும் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினை ஆலோசனை மேற்கொண்டு திர்ஹல் பணிகளை முடிக்கிவிட்டுவிட்டார். இன்று மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மீண்டும் நடக்க உள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல்
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் திமுக உடனடியாக வேட்பாளர்களை அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே திமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிடும் என்று கூறப்படுகிறது. கடந்த கூட்டத்தில் மா.செ.க்கள் சிலர் ஸ்டாலினுக்கு இந்த அறிவுரையை வழங்கி உள்ளனராம். கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தைக்கு காத்திருக்க வேண்டாம். நாம் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என்று கூறி உள்ளனராம்.
முன்கூட்டியே அறிவிக்கலாம்
திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும், அதுதான் சரியாக இருக்கும்.. நகராட்சி, மாநகராட்சி அளவில் நம்முடைய ஆட்கள் பதவியில் இருந்தால்தான் ஆட்சி நிர்வாகத்தை சரியாக செய்ய முடியும். மேயர்கள் திமுகவில் இருந்து வந்தால் தான் திட்டங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும் என்று மாவட்ட செயலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. நாம் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தால் கூட்டணிகள் நமக்கு பெரிதாக நெருக்கடி கொடுக்காது என்று அறிவுரையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாம்.
இன்றே முடிவு
ஏற்கனவே திமுக சார்பாக உத்தேச வேட்பாளர் பட்டியல் சில நகராட்சி, மாநகராட்சிக்கு மட்டும் தயார் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இன்று மா. செ கூட்டத்திற்கு பின் முழுமையான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி துரிதமாக செயல்படுவதன் மூலம் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டுகள் கேட்டு தொந்தரவு செய்ய நாட்கள் இருக்காது. திமுக கொடுக்கிற சீட்டுகளை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.