அனுமதிக்காத ஜெ.. உச்சத்தில் உதயநிதி.. நேரம் பார்த்து அரசியலுக்கு விஜய் தந்த கிரீன் சிக்னல்? பின்னணி?
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்க உள்ளனர். கட்சி கொடி மற்றும் நடிகர் விஜயின் புகைப்படங்களை பயன்படுத்தி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க உள்ளனர். நடிகர் விஜயின் இந்த முடிவு அவரின் அரசியல் திட்டங்களுக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது.. ஆனால் அதற்கு இது சரியான நேரம் கிடையாது என்று நடிகர் விஜய் ஏற்கனவே பலமுறை பேட்டிகளில் தனது அரசியல் ஆசைகளை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஏன் தனது படங்களிலும் கூட அரசியலுக்கு வருவது குறித்து நேரடியாகவும், இலைமறைகாயாகவும் அவ்வப்போது பேசி உள்ளார்.
சில ரசிகர் மன்ற கூட்டங்களில், மக்கள் இயக்க நிகழ்ச்சிகளில், விஜயின் குட்டி ஸ்டோரிகளில் எல்லாம் தன்னுடைய அரசியல் ஆசையை அவர் வெளிப்படையாக தெரிவித்தது உண்டு. கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் விஜய் இப்படி அரசியல் ரீதியாக பேசி சில முறை சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
நிறைவேறாத மருத்துவர் கனவு.. ஆனால் ஆனதோ ஐஎப்எஸ் அதிகாரி.. சுதா ராமன் வாழ்வில் நடந்த மாற்றங்கள்!
அதிமுக சர்ச்சை
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போது விஜயின் அரசியல் ஆசைகள் காரணமாக அவர் சில முறை சிக்கலில் மாட்டியதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக நடிகர் விஜயின் தலைவா படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. டைம் டு லீட் என்று தலைவா படத்தின் சப் டைட்டில் இருந்தது. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து அப்போது கடும் எதிர்ப்பும் எழுந்தது. இதனால் தலைவா படம் வெளியாவதில் பெரிய அளவில் பிரச்சனைகள் வந்தன.
ஜெயலலிதா மோதல்
பின்னர் விஜய் இதற்காக வீடியோ வெளியிட்டு பிரச்னையை சரி செய்யும் அளவிற்கு சென்றது. அதன்பின் பெரிதாக அரசியல் ரீதியான பிரச்சனைகளில் விஜய் தலையிட்டுக்கொள்ளவில்லை. ஜெயலலிதா இருந்தவரை விஜயின் அரசியல் ரீதியான திட்டங்களுக்கு எதிராக அழுத்தங்கள் கொடுப்பட்டதாக அப்போது பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இது அப்போது உறுதிப்படுத்தப்படவில்லை. விஜயும் தலைவா பிரச்சனைக்கு பின் பெரிதாக அரசியல் ரீதியான கருத்துக்களில் தலையிட்டுக்கொள்ளவில்லை. கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.
ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதா மறைவிற்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அமைதியாக கலந்து கொண்டது, பீட்டாவிற்கு எதிராக வீடியோ போட்டது என்று மீண்டும் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பக்கமும், மக்கள் பிரச்சனை பக்கமும் கவனம் செலுத்த தொடங்கினார். அதன்பின் நீட் தேர்வால் மரணம் அடைந்த அனிதாவிற்காக குரல் கொடுத்தது , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் வீட்டிற்கு சென்றது, இசை வெளியீட்டு விழாவில் பேசும் குட்டி ஸ்டோரிகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசியது என்று விஜய் கொஞ்சம் துணிச்சலான அரசியல் பாணிகளில் இறங்கினார்.
திமுக விஜய்
இது விஜய் திமுக இடையில் கொஞ்சம் நெருக்கத்தை கொடுத்தது. 2ஜி வழக்கிற்கு எதிராக கத்தி படத்தில் வசனம் வைத்து இருந்தாலும் கூட சர்க்கார் உள்ளிட்ட படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது விஜய்க்கு உறுதுணையாக திமுக இருந்தது. அதிமுகவினர் சர்க்கார் படத்தில் ஜெயலலிதாவிற்கு எதிரான வசனங்கள் இருப்பதாக விஜய்க்கு எதிராக நேரடியாக ;போராடினார்கள் அப்போது. முக்கியமாக ஜிஎஸ்டிக்கு எதிராக விஜய் வைத்திருந்த மெர்சல் பட வசனம் பாஜகவின் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அப்போது பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா விஜயை ஜோசப் விஜய் என்று கூறி மத ரீதியாக விமர்சனங்களை செய்து இருந்தார்.
சைக்கிள் அரசியல்
முக்கியமாக விஜய் வீட்டு ரெய்டு, அதன்பின்பான விஜயின் மாஸ்டர் செல்பி என்று கடந்த 2 வருடங்களில் அரசியல் ரீதியாக விஜய் அதிகம் கவனிக்கப்பட்டார். அப்போதெல்லாம் திமுக ஒரு வகையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விஜய்க்கு ஆதரவு அளித்து இருந்தது. சட்டசபை தேர்தல் நேரத்திலும் கூட விஜய் சைக்கிளில் வந்தது பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பிரச்சாரமாகவும், பாஜகவிற்கு எதிரான பிரச்சாரமாகவும் பார்க்கப்பட்டது. அதோடு இவர் கருப்பு சிவப்பு சைக்கிளை பயன்படுத்தியது அவர் திமுகவிற்கு கொடுத்த ஆதரவு என்று குறியீடு எல்லாம் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்முறையாக மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
மறைமுகம்
இதற்கு முன்பே மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே தனியாகவோ, தாங்கள் இருக்கும் பிற கட்சியிலோ சேர்ந்து போட்டியிட்டு உள்ளனர். விஜய் ரசிகர்கள் என்றாலும் வெளிப்படையாக மக்கள் இயக்க கொடியையோ, விஜய் புகைப்படத்தையோ பயன்படுத்தாமல் அரசியலில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இதில் சில விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை விஜய் புகைப்படம், மன்ற கொடியை பயன்படுத்திக் கொள்ள விஜய் மன்ற நிர்வாகிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதி
ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தனித்து போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும். 9 மாவட்ட நிர்வாகிகள் இதில் போட்டியிடுவார்கள். 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த தேர்தலுக்காக கட்சி பணிகளை மேற்கொள்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உதயநிதி உச்சம்
சரியாக திமுக ஆட்சி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் விஜய் இப்படி ஒரு அரசியல் மூவை செய்து இருக்கிறார். இன்னொரு சினிமா நட்சத்திரமான உதயநிதி ஸ்டாலின் திமுக எம்எல்ஏவாகி அரசியலில் உச்சத்தில் இருக்கிறார். தனது தொகுதி மட்டுமின்றி மற்ற தொகுதியிலும் உதயநிதிக்கு கணிசமான மக்கள் ஆதரவு உள்ளது. உதயநிதி எங்கே சென்றாலும் கூட்டம் கூடும் என்ற நிலை உள்ளது. உதயநிதியின் இந்த அரசியல் வெற்றி விஜய்க்கும் அரசியல் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக
அதிமுகவை போல திமுக தனக்கு எந்த முட்டுக்கட்டையும் போடாது என்று விஜய் நம்பி இப்படி அரசியல் பக்கம் களமிறங்கி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. திமுகவிற்கும் விஜய்க்கும் பெரிய மனஸ்தாபம் இல்லை, இப்போது கூட சன் பிக்சர்ஸ் படங்களில் விஜய் நடிக்கிறார். அப்படி இருக்கும் போது விஜயின் இந்த அரசியல் திட்டம் காரணமாக அவருக்கு ஆளும் தரப்பில் இருந்து பெரிதாக எதிர்ப்பு எதுவும் வாராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தனது எதிர்கால அரசியலுக்கான முன்னோட்டமாக இதை விஜய் பார்ப்பதாகவே தெரிகிறது. விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் மன்ற நிர்வாகிகளை களமிறக்கி தேமுதிக என்ற பெரிய கட்சியை எப்படி கட்டமைத்தாரோ அப்படி விஜய் செய்திருக்கும் அரசியல் மூவாக இது பார்க்கப்படுகிறது.