ஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை காலதாமதம் இன்றி நடத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 மாதம் அவகாசம் கோரிய, தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டனத்திற்குரியது. உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாததால் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் சூழலில், உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதகள் இல்லை என்பது வேதனைக்குரியது. நீதிமன்றம் பலமுறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமல் அலட்சியம் காட்டி பலமுறை கண்டனத்திற்குள்ளானது மாநில தேர்தல் ஆணையம்.
தற்போது மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் கோரியுள்ளது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். 2016 அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தலை தான், இன்னும் நடத்தாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016 அக்டோபர் 24ம் தேதி முதல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications