எதிர்க்கட்சிகளை ஏசாமல்.. இந்த ஜுன் மாசமாவது தொற்றை கட்டுப்படுத்துங்கள்.. மு.க. ஸ்டாலின் கோரிக்கை
ஊரடங்கை முறையாக பயன்படுத்த முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: எதிர்க்கட்சிகளை ஏசாமல்.. இந்த ஜுன் மாத ஊரடங்கு அறிவிப்பை விளம்பரத்துக்காகவும் வீணடிக்காமல் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்... ஒருவர்கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது என்றீர்கள்.. 129 பேர் இறந்துள்ளனர்.. வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும்கூட மெத்தனம்? என்று முதல்வரை கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி உள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேசமயம் லாக்டவுனும் நீடிக்கிறது.. மற்றொரு பக்கம் தளர்வுகளும் வெளியாகி நடைமுறையாகி வருகின்றன.
5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை அமலபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கை சரியாக பயன்படுத்தி கொண்டு, தொற்றை ஒழிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பு
அந்த அறிக்கையில் அவர் கூறியதன் சுருக்கம் இதுதான்: "ஜூன் மாத ஊரடங்கு அறிவிப்பை விளம்பரத்துக்காக வீணடிக்காமல் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். முதல்வர் பழனிசாமியின் ஆணவம், அலட்சியம், கையாலாகாத்தனம், பொறுப்பின்மைக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள்.

பட்டினி
தமிழ்நாட்டில் பசி பட்டினியே இல்லை என்று முதலமைச்சர் சொல்லி கொண்டிருக்க, 98,752 பேர் உணவு தேவைக்காக மனு கொடுக்கிறார்கள் என்றால், எந்த லட்சணத்தில் ஆட்சி நடக்கிறது?.. மக்களுக்கு எங்களால் எதுவும் தர முடியாது, ஊரை திறந்து விடுகிறோம், நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லி உடமையிலிருந்து கழன்று கொள்ள எத்தனிக்கிறார் முதலமைச்சர்.

மெத்தனம்?
கொரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வென்டிலேட்ர்கள் வெறும் 560தான்.. சென்னையில் மட்டும் 6781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இறந்தவர்கள் 129 பேர்.. ஒருவர்கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது என்று கூறிய அரசுக்கு வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும்கூட மெத்தனம்?

எடப்பாடி பழனிசாமி
இந்த ஊரடங்கு காலத்தை தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல், ஜுன் மாதத்தையாவது உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.. அதைவிடுத்து அதிமுகவுக்குள் குழு அரசியல் நடத்த, ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு, எதிர்க்கட்சிகளை ஏசவும், பேசவும் செய்தால் எந்தவித பயனும் ஏற்படாது என எச்சரிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications