மதுவுக்கு எதிராக எந்த கட்சியும் இல்லை.. யாருமே இல்லை.. திரண்டு வந்து குமுறல் கருத்தை சொன்ன மக்கள்!
மதுவுக்கு எதிராக எந்த கட்சியும் போராடவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள்
சென்னை: "மதுவுக்கு எதிராக எந்த கட்சி போராடுகிறது" என்று ஒரு கேள்வியைதான் நம் வாசகர்களிடம் முன்வைத்தோம்.. மொத்த பேரும் குமுறி விட்டார்கள்.. எந்தக் கட்சியும் ஆக்கப்பூர்வமாக போராடுவதில்லை என்று வாக்களித்துள்ளனர்!
Recommended Video
கடந்த சில தினங்களாகவே மதுக்கடைகளை திறந்து விட்டுவிடுவார்களோ என்ற கலக்கம் மக்களுக்கு இருந்து கொண்டே இருந்தது.. ஊரடங்கு தளர்வுகளில் கூட முதல்கட்டமாக டாஸ்மாக் திறப்பு குறித்த அறிவிப்பு இல்லை.
திடீரெனதான் தமிழக அரசு சார்பாக அறிக்கை வெளியானது.. அதற்கு பக்கத்து மாநிலங்களின் எல்லைகளுக்கு நம் மக்கள் சென்று மதுவாங்க முற்படுவதால்தான் இந்த டாஸ்மாக் திறக்கப்படுவதாக சொல்லப்பட்டதே தவிர, இதுவரை மதுக்கடைகளை திறந்ததற்கான காரணத்தை அரசு முறையாக சொல்லவில்லை... அது சம்பந்தமாக தெளிவுப்படுத்தவும் இல்லை.
'கொரோனா ரெட் ஜோன்' சென்னையில் இருந்து இன்று 1200 பேர் மணிப்பூருக்கு சிறப்பு ரயிலில் பயணம்
கண்ணீர்
இதனால் பல்வேறு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.. போராட்டங்களை நடத்தினர்.. சில இல்லத்தரசிகள் வீடியோ, ஆடியோ மூலம் அரசுக்கு கண்ணீர் கோரிக்கையை விடுத்து, கடைகளை திறக்காதீர்கள் என்று சொன்னார்கள்.. அதுபோலவே எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.. டாக்டர் ராமதாஸ் முதல் திமுக தலைவர் ஸ்டாலின் வரை எதிர்ப்பு சொன்னார்கள்.. இருப்பினும் அரசு திட்டமிட்டபடி கடைகளைத் திறந்தது.. பலத்த பாதுகாப்புடன் ராஜ மரியாதையுடன் குடிகாரர்கள் மது வாங்கிச் சென்றனர்.
அதிமுக
இதை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முக ஸ்டாலினும்... "கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம்... நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்" என்று தெரிவித்ததுடன், கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ, கருப்பு கொடி, கருப்பு மாஸ்க் சகிதம் மதுக்கடைகளுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை குடுமபத்துடன் சேர்ந்து வெளிப்படுத்தினார்!!
மநீம
ஆனால் இதையெல்லாம் விட உண்மையிலேயே மக்கள் நீதி மய்யம்தான் கோர்ட்டுக்குப் போய் தடை உத்தரவை வாங்கி வந்து தாய்மார்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கு போராட்டம், எதிர்ப்பு என்று கிளம்பியபோது, மக்கள் அதை பெரிதுபடுத்தவில்லை... கட்சி சார்பாக நடந்து வரும் மது ஆலைகளை மூட தயாரா? என்று கேள்விகளை கேட்டனர்.. அதனால் ஸ்டாலினின் கருப்பு சட்டை போராட்டம், அறிக்கை, ட்வீட்கள் போன்றவை எல்லாமே வழக்கமான அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.
போராட்டம்
இப்படிப்பட்ட சமயத்தில்தான் நாம் நம் வாசகர்களிடம் இதுகுறித்து கேள்வி ஒன்றை எழுப்பினோம்.. மதுவுக்கு எதிராக எந்த கட்சி போராடுகிறது என்பதே அந்த கேள்வி.. கட்சிகளின் பெயர்களை நாம் குறிப்பிடவில்லை.. மக்கள் முடிவுக்கே அதை விட்டுவிட்டோம்.. "ஒரு கட்சியும் கிடையாது" என்பதற்கு 79.97% சதவீதமும், எல்லா எதிர்க்கட்சிகளும் என்பதற்கு 20.03% சதவீத ஓட்டுக்களும் பதிவாகி உள்ளது... கிட்டதட்ட 80 சதவீத மக்கள் எந்த கட்சியும் மதுவுக்காக போராடவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அதுபோலவே "மதுக்கடைகள் திறப்பு சரியா? தவறா" என்ற கேள்வியை முன்வைத்திருந்தோம்.. அதற்கு "சரி" என்று 21.44 சதவீத ஓட்டுக்களும், "தவறு" என்று 78.56 சதவீத ஓட்டுக்களும் பதிவாகி உள்ளன.
ஹைகோர்ட்
இந்த சமயத்தில், மதுக்கடைகளை மூட ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.. இது குறித்து மேல்முறையீடு செய்யப்படுமா? அவ்வாறு செய்யப்பட்டால் அதன் முடிவு எப்படி இருக்குமோ தெரியாது.. ஆக மொத்தம் "ஆண்ட கட்சியும்சரி, ஆளும் கட்சியும் சரி, கூட்டணி கட்சியும் சரி, எல்லாருமே மதுக்கடை விஷயத்தில் தங்களைதான் ஏமாற்றுகிறார்கள் என்றே மக்கள் மனசில் இப்போது வரை உள்ள பதிந்து போன எண்ண ஓட்டமாகும்!