என்னது ராஜ்யசபா சீட்டா? நடையை கட்டலாம்.. கதவை சாத்துங்க- தேமுதிகவுக்கு அதிமுக, பாஜக பொளேர் பதிலடி?
சென்னை: லோக்சபா தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் தர வேண்டும் என பேரம் பேசிய தேமுதிகவுக்கு அதிமுகவும் பாஜகவும் மறுப்பு தெரிவித்துவிட்டதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கிறதாம் அக்கட்சி தலைமை.
லோக்சபா தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது தேமுதிக. 14 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் கொடுத்தால் கூட்டணி என முதலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். ஆனால் திடீரென தாம் அப்படி சொல்லவே இல்லை எனவும் பல்டி அடித்தார் பிரேமலதா.

தேமுதிகவைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தல்களில் 2006 முதல் போட்டியிட்டு வருகிறது தேமுதிக. அதிகபட்சமாக 2016-ல் 8.38% வாக்குகளைப் பெற்றது தேமுதிக. 2011 சட்டசபை தேர்தலிலும் கூட 7.88% வாக்குகளை அறுவடை செய்தது தேமுதிக. ஆனால் 2016, 2021 தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்தது. 2016-ல் 2.39% வாக்குகளையாவது பெற்ற தேமுதிக கடந்த தேர்தலில் வெறும் 0.43% வாக்குகளைத்தான் பெற்றது. அத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றுப் போன கட்சிதான் தேமுதிக.
லோக்சபா தேர்தல்களிலும் கூட ஒரு முறை கூட 1%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதே கிடையாது. 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 0.75% வாக்குகளைப் பெற்றது தேமுதிக. இதுதான் அக்கட்சி லோக்சபா தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்கு. ஆனால் 2014 தேர்தலில் 0.38%; 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெறும் 0.15% வாக்குகளையே அக்கட்சியால் பெற முடிந்தது.
ஆனாலும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் போது கூடிய கூட்டத்தை வைத்து தாங்கள் பெரிய கட்சி என்ற மிதப்பில் இருக்கிறது தேமுதிக. இருப்பினும் அக்கட்சியை சகித்துக் கொண்டு அதிமுக தரப்பு, 3 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தரலாம் என முதலில் சொல்லிப் பார்த்தது. ஆனால் லோக்சபா தொகுதிகளை அதிகம் தர வேண்டும் என அடம் பிடித்தது தேமுதிக. இதனால் ராஜ்யசபா சீட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அதிமுக முறைத்துக் கொண்டிருக்கிறதாம்.
இதேபோல பாஜகவும் ராஜ்யசபா சீட் எல்லாம் தர முடியாது.. கூட்டணியில் இணைந்து கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிடுங்கள்.. முடிந்தால் தாமரை சின்னத்தில் கூட போட்டியிடுங்க என அறிவுறுத்திவிட்டதாம். இப்படி அதிமுகவும் பாஜகவும் ராஜ்யசபா சீட் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்குகிறதாம் தேமுதிக தலைமை. அய்யோ பாவமே!












Click it and Unblock the Notifications