10+1 வாங்குங்க.. தமிழகம் வரும் டெல்லியின் முக்கிய தலை.. திமுக-காங்கிரஸ் கூட்டணி கணக்கில் மாற்றம்?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. நாளை மறுநாள் மீண்டும் இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை திமுக வழங்க மறுத்து வரும் நிலையில் டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் தமிழகம் வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்த 2 கட்சிகளும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் திமுக அந்த இடங்களை வழங்கி உள்ளது.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் போலவே தலா 2 தொகுதிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இன்னும் இரு கட்சிகளுக்குமான தொகுதிகள் முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு என்பது விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், வைகோவின் மதிமுக கட்சிகளுக்கு இன்னும் தொகுதி இறுதி செய்யப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2019 தேர்தலில் அதன்படி திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதேபோல் புதுச்சேரியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதோடு, புதுச்சேரியிலும் வாகை சூடியது.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூடுதலாக ஒரு தொகுதியை சேர்த்து 10 இடங்களையும், அதோடு புதுச்சேரியை சேர்ந்து மொத்தம் 11 தொகுதிகளை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக 7 + 1 (அதாவது தமிழகத்தில் 7 , புதுச்சேரியில் ஒன்று) என 8 இடங்களை மட்டும் வழங்க முன்வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்தனர்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கேவும் 10 + 1 தமிழகத்தில் 10 + புதுச்சேரி என 11 தொகுதிகளை திமுகவிடம் பெற அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தம் 11 தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் திமுக பிடி கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தமிழகம் வர உள்ளார். இவர் நாளை தமிழகம் வருகிறார். நாளை மறுநாள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதனை சுமூகமாக முடிக்கும் வகையில் அஜோய் குமார் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications