மத்திய அமைச்சர் பதவி தருவோம்-தேமுதிகவை பாஜகவில் இணைத்தால்.. டெல்லி ஒரே போடு- பீதியில் பிரேமலதா!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதியாகி இருக்கும் நிலையில் அக்கட்சிப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காணும் கனவுகளுக்கு டெல்லி அதிரடி பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக நிறுவனத் தலைவர் நடிகர் விஜயகாந்த் மறைவின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர். விஜயகாந்த் இறுதி நிகழ்வுக்கு திரண்ட மக்கள் வாக்களித்திருந்தாலே தேமுதிக உயிரோடு இருந்திருக்கும் என்பது அப்போது பேச்சாக இருந்தது.

பிரேமலதாவின் கனவு: இன்னொரு பக்கம் விஜயகாந்த் மறைவால் கிடைத்த அனுதாபத்தை அப்படியே அரசியல் அறுவடைக்கு பயன்படுத்துவது என்பதில் வழக்கம் போல அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா தீவிரம் காட்டி வருகிறார். அதுவும் விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் பாஜக மேலிடத்திடம் இருந்து கிடைத்து வரும் அனுதாபத்தை வைத்து ரொம்பவே அரசியல் கணக்கு போட்டு வருகிறாராம் பிரேமலதா. அதில் ஒன்றுதான் எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியை பெறுவது என்பது.
பாஜகவின் ஸ்கெட்ச்: இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சரியான கூட்டணி இல்லை என்பது உண்மைதான். பாஜக பெரிதும் நம்பிய அதிமுக, இனி கூட்டணிக்கு திரும்பாது என்பதுதான் யதார்த்தம். பாஜகவை நம்பி வேறு எந்த கட்சிகளும் கை கோர்க்கவும் முன்வரவில்லை. தேமுதிகதான் தற்போது பாஜகவுக்கு இணக்கமான கூட்டணி கட்சியாக இருக்கிறது. விஜயகாந்த் மறைவினால் கிடைத்த அனுதாபத்தை மனதில் வைத்துதான் டெல்லி மேலிடமும் தேமுதிக பக்கம் கவனத்தை திருப்பியது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு கூட முன்னர் தேமுதிகவை அழைக்கவில்லை. ஏனெனில் அந்த கட்சிக்கான செல்வாக்கு கொஞ்சமும் இல்லை என்கிற புரிதலில்தான். தற்போது விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இணைந்து எப்படியாவது மத்திய அமைச்சர் ஆகலாம் என்பதுதான் பிரேமலதாவின் கனவு. அதே நேரத்தில் பிரேமலதாவுக்கு இன்னொரு நிகழ்வும் தெரிந்தாக வேண்டும். தமாகா தலைவர் ஜிகேவாசன் இப்போதும் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார். ஜிகே வாசனை பாஜகவில் இணைய சொன்னது மேலிடம்; மத்திய அமைச்சர் பதவி கூட தருவதாகவும் சொன்னது. ஆனால் வாசன், இதுவரை அப்படி ஒரு முடிவெடுக்கவில்லை. பிரேமலதாவுக்கும் அதே வாய்ப்பைதான் பாஜக மேலிடம் தரும். அதாவது தேமுதிகவை பாஜகவுடன் இணைத்தால் மத்திய இணை அமைச்சர் பதவி குறித்து மேலிடம் பரிசீலிக்க வாய்ப்பு இருக்கிறது- அதுவும் ரிசல்ட்டைப் பொறுத்துதான் என்கின்றனர்.
பிரேமலதா பீதி: டெல்லி மேலிடத்தின் இந்த கால்குலேசனும் தேமுதிகவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். மத்திய அமைச்சர் பதவிக்காக கட்சியையே காவு கொடுப்பதுதான் சரியான முடிவாக இருக்குமா? கட்சியே இல்லாமல் பாஜகவில் போய் பத்தோடு பதினொன்றாக காலத்தை ஓட்ட முடியுமா? பாஜகவை முழுமையாக நம்பி கட்சியை ஒப்படைத்துவிட முடியுமா? என பீதியுடன் சில மூத்த பத்திரிகையாளர்களிடம் படுதீவிரமாக ஆலோசித்து வருகிறாராம் பிரேமலதா விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications