‛3 தொகுதி கேட்ட மா.கம்யூனிஸ்ட்’.. 2 தான் என உறுதியாக கூறிய திமுக.. 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக கடந்த முறையை போலவே 2 இடங்களை மட்டுமே தருவோம் என உறுதியாக கூறியதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது

அதன்படி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் தற்போதைய எம்பி நவாஸ் கனி களமிறங்குவார் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
அதேபோல் திருச்செங்கோடு எம்எல்ஏவான ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையும் இந்த தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வெற்றி பெற்ற நிலையில் இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுடன் திமுக தலைவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில் தான் திமுக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் 2ம் கட்டமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தியது. கடந்த 4ம் தேதி முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்ட்டது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலையில் நடந்தது..
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கேட்டுள்ளது. மதுரை, கோவை தொகுதிகளோடு, தென்காசி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் ஒரு தொகுதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்யும்படி திமுகவிடம் கூறியுள்ளது. ஆனால் திமுகவோ தொகுதிகளை அதிகப்படுத்தி தர மறுத்துள்ளது.
கடந்த முறை மதுரை, கோவை என 2 தொகுதிகளை தந்தோம். அதேபோல் இந்த முறையும் 2 தொகுதிகள் மட்டும் தான் கிடைக்கும் என தெரிவிக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இழுபறி நிலவிய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. திமுக சார்பில அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்பதில திமுக ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் விரைவில் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் தான் இருந்தது. அப்போது மதுரை, கோவை என 2 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் 2 தொகுதியிலும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சு வெங்கடேசனும், கோவையில் பிஆர் நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications