அதிமுக விட்ட தூது.. திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை இனிப்புதான்.. செல்வப்பெருந்தகை பதிலடி
சென்னை: தமிழ்நாட்டில் திமுக உடன் காங்கிரஸ் கட்சி பிரெண்ட்லியாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.. லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை திமுக காங்கிரஸ் இடையே இனிப்பாகவே உள்ளது என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அரசியல் களம் அனலடிக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. திமுக கூட்டணி வலிமையான கூட்டணி என்று சொன்னாலும் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை தருவதற்கு திமுக தயாராக இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற இடங்களைக் கூட தரக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக விருதுநகர், சிவகங்கை, கரூர் போன்ற தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தரக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
திமுக சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி காங்கிரசின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தலைமை அலுவலகத்தில் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்பட்டது. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில்தான் காங்கிரஸ் திமுக இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் கசப்புணர்வு நீடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதிமுகவின் வைகைச் செல்வமும் காங்கிரஸ் கட்சயின் கசப்புக்கு அதிமுகவில் மருந்து உள்ளதாக கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன், அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்லமுறையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி முடிவு எட்டிய பிறகு தலைமை கழகம் சார்பாக முடிவு அறிவிக்கப்படும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான மருந்து அதிமுகவுடன் இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
இந்திய கூட்டணியில் அதிமுக இணை வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதில் கிடைக்கும். அதிமுகவின் முக்கிய நல்ல, நல்ல அறிவிப்புகளை அதிமுக பொதுச்செயலாளர் அறிவிப்பார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மிகப்பெரிய வியூகங்களையும், யூகங்களையும் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, இந்தியா கூட்டணி வலிமையாகவும் ப்ரெண்ட்லியாகவும் உள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நடந்து முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.
திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த வித கசப்பும் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை இனிப்பாகவே உள்ளது என்று வைகை செல்வனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் இடத்தில் போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படி எதுவும் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் செல்வ பெருந்தகை.












Click it and Unblock the Notifications