பெண்களை டார்கெட் செய்த திமுக தேர்தல் அறிக்கை.. அடேங்கப்பா! இத்தனை வாக்குறுதிகளா?
சென்னை: நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ. 1,000 , மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் கடன் உதவி உட்பட பெண்களுக்கான வாக்குறுதிகளை திமுக தேர்தல் அறிக்கை வாரி வழங்கி உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத்துக்கான வாக்குறுதிகளில் சில..

- இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும்.
- சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டு சென்றிட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை கொடுப்பது அவசியமாகும். அதன் அடிப்படையில் இது சம்பந்தமான சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திட ஒன்றிய அரசை தி. மு. க. வலியுறுத்தும்.
- இந்திய அளவில் சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும்.
- மாவட்ட அளவில், பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனை சந்தைகளை அமைத்து, தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
- பல்வேறு உலக நாடுகள், பெண் தொழிலாளர்களுக்குத் தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் மகப்பேறு காலத்தில் பொருளாதார உதவிகளை வழங்கிவருவது போல், தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தால் பாகுபாட்டைத் தவிர்த்து பாலின உரிமைகள் பணியிடங்களில் உறுதி செய்யப்படும்.
- வீட்டுப்பணியாளர் நலன்களைக் காத்திடும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
- வீட்டுப்பணியாளர்கள் நியமனங்களை முறைப்படுத்துதல், அவர்களுடைய சமூகப் பாதுகாப்பு, அவர்களின் குறைகளைக் களைதல் முதலியவற்றுக்காக முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.
- இந்திய அளவில் விவசாயத்தில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி, செயல்விளக்கம், விதை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் ஆகியவை குறித்துத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
- சிறுகுறு தொழில்களில் பெண்களை ஊக்குவித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது உள்ள 30% மூலதன மானியம் பெண்களுக்கு 35%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications