"மீண்டும் வாரணாசி.." பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டி இல்லை.. என்ன காரணம்! பாஜக பிளான் என்ன
சென்னை: லோக்சபா தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இப்போது வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான கூட்டணியை அமைப்பது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தேசியளவில் பார்க்கும் போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி மோதல் இருக்கும். இதனால் இது தரப்பும் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளது.
பிரதமர் மோடி: இந்த மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கு முன்னதாகவே லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடத் திட்டமிட்டது. இதற்காக நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட மீட்டிங் நடைபெற்றது.
முதற்கட்டமாக சுமார் 100+ தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எந்த தொகுதிகளில் எல்லாம் பாஜக வெல்ல வாய்ப்புகள் அதிகமோ முதற்கட்டமாக அந்த தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனக் கூறப்பட்டது. எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதிலேயே சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாக வேட்பாளர் தேர்வை முடித்து பாஜக வேட்பாளர்களை பாஜக அறிவிக்கத் திட்டமிட்டது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: அதன்படி இன்று மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்களாக உள்ள 34 மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உபி லக்னோ, ஸ்மிருதி இரானி அமேதி, கிரண் ரிஜூஜூ அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இது தவிர மதுராவில் நடிகை ஹேமமாலினி, ராஜஸ்தான் கோட்டாவில் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார். அனைத்தையும் விடப் பிரதமர் மோடி உபி-இல் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறையும் வாரணாசியில் தான் போட்டியிட்டிருந்த நிலையில், இந்த முறையும் அவர் அங்கே தான் களமிறங்குகிறார்.
பிரதமர் மோடி: தமிழ்நாட்டில் தனது கட்சியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த முறை ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. சில பாஜக நிர்வாகிகள் கூட மோடி தமிழகத்தில் போட்டியிடக் கூடும் என்பது போலக் கூறினர். இருப்பினும், அந்தக் கருத்துகளைப் பொய்யாக்கும் வகையில் பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டணி இறுதியாகாத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 2019இல் நடந்த லோக்சபா பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு முன்னதாக 2014இல் பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதோதரா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் மோடி வென்ற நிலையில், வதோதரா தொகுதிக்கான எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications