தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு மக்கள் கடுமையான 'செய்தியை' சொல்லப் போகிறார்கள்.. பிரதமர் மோடி வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மிகக் கடுமையான ஒரு செய்தியை சொல்லப் போகிறார்கள் என பிரதமர் மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தந்தி டிவி சேனலுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். பிரதமர் மோடி தம்முடைய பேட்டியில் கூறியிருப்பதாவது: பாஜகவுக்கு நாடு முழுவதும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. மக்களின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற நாம் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல் சிந்தனையுடன் பார்ப்பதே இல்லை. தமிழ்நாடு என்பது இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலம். தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு சிறப்புக்குரியவை. வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு தமிழ்நாட்டின் திறன்கள் மிகவும் முக்கியமானவை. இதுதான் எங்களது கனவு.
வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு- பாரதத்துக்கு வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு என்பதுதான் எங்கள் விருப்பம். நாட்டிலேயே மிகப் பெரிய பாதுகாப்பு முனையம் தமிழ்நாட்டில்தான் அமைய உள்ளது. தூத்துக்குடி துறைமுகமானது வரும் காலத்தில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையிலும் என்னால் உத்தரவாதங்களை தந்துவிட முடியும்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் எந்த ஒரு தகவலையும் செய்தியையும் சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் மிக கடுமையான ஒரு செய்தியை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் சொல்லப் போகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் இருந்து 10 பேர் கூட அரசியலுக்கு வரலாம். அது பிரச்சனையே இல்லை. ஆனால் ஒரு குடும்பமே ஒரு அரசியல் கட்சியை நடத்துவதுதான் சிக்கல். ஒரு குடும்பமே ஒரு அரசியல் கட்சியை நடத்தும் போது, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் போது அடுத்த தலைமுறையும் அந்த குடும்பத்தில் இருந்துதான் வரும். இதுதான் குடும்ப அரசியல்/ வாரிசு அரசியல் என்பது. என்னதான் கட்சிகளில் திறமையாளர்கள் இருந்தாலும் அந்த குடும்பத்தின் கீழ்தான் அவர்கள் இருப்பர். இதனைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது ஜனநாயகத்துக்கும் எதிரானது. அனைவருக்கும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும். ஆனால் குடும்ப அரசியலில் இது சாத்தியமே இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications