அதிமுக டெப்பாசிட் இழக்கும் 4 தொகுதிகள்? மோடிதான் பிரதமர்? ரவீந்திரன் துரைசாமி நெத்தி அடி!
சென்னை: அதிமுக இந்த முறை 4 தொகுதிகளில் டெப்பாசிட் இழக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி சரியாக அமையவில்லை. பாஜகவிலிருந்து வெளியேறினால் தனது தலைமையை ஏற்றுக் கொண்டு சில கட்சிகள் இணைவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அரசியல் கணக்குப் போட்டார்.

ஆனால், திமுக கூட்டணியை உடைத்து ஒரு கட்சியைக் கூட அவரால் இழுக்க முடியவில்லை. அதற்கு மாறாக இந்த முறை அதிமுக கூட்டணியிலிருந்த தமீம் அன்சாரி கூட திமுக பக்கம் தாவிவிட்டார்.
எனவே எதிர்பார்த்த கூட்டணியை அதிமுகவினால் அமைக்க முடியவில்லை. இறுதி நேரம் வரை பாமக கூட்டணிக்கு வரும் என்று காத்திருந்தார் எடப்பாடி. அந்தக் கட்சியும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்ததால், மிகப்பெரிய பலம் இல்லாத நிலைக்கும் எடப்பாடி தனித்துவிடப்பட்டார்.
இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் வரும் 2026 சட்டசபைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராது என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
அவர் அப்போது தனித்துத்தான் களம் காண வேண்டி வரும். அவரது பலத்தை வைத்து ஸ்டாலினை எடப்பாடியால் வெல்ல முடியாது. எனவே 2026இல் கூட மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வரும் சூழல்தான் இப்போதைக்கு நிலவுகிறது என்றும் அதிமுக தரப்புக்கு ஒரு ஷாக் கொடுத்திருக்கிறார்.
உண்மையில் இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக டெப்பாசிட் இழக்குமா? அப்படி என்றால் எந்தெந்த தொகுதிகளில் இழக்கும் போன்ற விசயங்களுக்கு விரிவாக ஒரு விளக்கம் அளித்துள்ளார் ரவீந்திரன் துரைசாமி.

அவர் ஒரு டியூடிப் தளத்திற்கு இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வில் இந்த 2024 மக்களவைத் தேர்தல் மீண்டும் ஒரு தோல்வியைத்தான் கொடுக்கும் என்பது எனது கணிப்பு. எப்படி இந்தத் தேர்தலில் ஒரு மெகா கூட்டணியை எடப்பாடி பழனிசாமியால் அமைக்க முடியவில்லையோ அதே மாதிரி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முடியாது.
கமல்ஹாசனுக்கு 5 சீட்டு தரப் போவதாகவும் அவர் அதிமுக கூட்டணிக்கு வரப் போவதாகவும் சொன்னார்கள். ஆனால் அவர் வரவில்லை. அதேபோல திருமாவளவன் வருவார் என்றார்கள். அவர் உறுதியாக திமுக கூட்டணியுடன் இருந்துவிட்டார்.
இப்போது செல்லூர் ராஜு, ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அடுத்த நாளே அதிமுக ஆட்சியில் நிலக்கரி வாங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளது ராகுல் ஒரு போடு போட்டுள்ளார்.

எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. எடப்பாடியுடன் சேர்ந்தால் அரசியல் லாபம் கிடைக்காது. ஆகவே ஸ்டாலினுடன் இருந்தால்தான் அதிகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அவர் பக்கமேதான் இயல்பாக நிற்பார்கள். அதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியால் தனித்து இருந்து ஸ்டாலினைத் தோற்கடிக்க முடியாது. அந்தப் பலம் இவரிடம் இல்லை. ஆகவே, அவர் சிலருடன் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் திமுகவைத் தோற்கடிக்க முடியும்.
ஆனால், அதைச் செய்வதற்கு எடப்பாடி முன்வரமாட்டார். அதிமுக கட்சியைக் காப்பாற்றுவதற்காகப் பலரும் பல தியாகங்களைச் செய்வார்கள். ஆனால், ஒரு தியாகத்தையும் எடப்பாடி பழனிசாமி செய்யமாட்டார். அதுதான் அவரது பிரச்சினை. ஆகவேதான் கட்சிக்குள் இடியாப்ப சிக்கல் போல் பல குழப்பங்கள் உள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலில் நாடார் மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளில் அதிமுக டெப்பாசிட் இழக்கும். இது உறுதி.
20 தொகுதிகள் வரை அதிமுக வெற்றிபெறும் என்று சவுக்கு சங்கர் சொன்னார். ஆனால், நான் சொல்கிறேன் அதிமுக 20 முதல் 25% வாக்குகளைத்தான் பெறுமே ஒழிய 20 சீட்டுகள் எல்லாம் வெல்லாது. இறுதித் தீர்ப்பு என்ன வருகிறது என்பதை வரும் 4 ஆம் தேதி பிறகு உட்கார்ந்து பேசுவோம்" என்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரவீந்திரன் துரைசாமி, "மோடிதான் மீண்டும் பிரதமர். அதில் சந்தேகமே இல்லை. இந்த முறை உபி, ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சில பின்னடைவுகளை பாஜக சந்திக்கலாம்.
அதைச் சரிக்கட்டும் விதமாகத் தெலுங்கானா, ஒடிசாவில் கூடுதல் இடங்களை பாஜக பெறும். ஆந்திராவில் நல்ல கூட்டணி பாஜகவுக்கு அமைந்துள்ளது. ஆகவே, அங்கேயும் பாஜகவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் பாஜக கடந்த முறை 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட அதிகமான தொகுதிகள் கிடைக்கும். இதே போன்று பாஜக 2019 இல் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிக சதவீதத்தை இந்த முறை பெறும்" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications