கரூரில் ஜோதிமணி.. சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம்.. வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்
சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் 46 தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியானது. இதில்
தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. 7 வது கட்ட தேர்தல் ஜுன் 2ம் தேதி நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் புதிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 46 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி தொகுதிக்கான வேட்பாளராக சிட்டிங் எம்பி வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார்.
‛பிராமணர்கள் இல்லை’..தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் எந்த ஜாதிக்கு அதிக வேட்பாளர்கள் தெரியுமா?
தமிழகத்துக்கான காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் இன்று வெளியான பட்டியலில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
திருவள்ளூர்: திருவள்ளூர் (தனி) தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக டாக்டர் கே ஜெயக்குமார் உள்ளார். அவருக்கு பதிலாக சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். கர்நாடகாவில் பணியாற்றிய நிலையில் ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது அவர் காங்கிரஸ் வார்ரூம் பொறுப்பாளராக செயல்பட்டு அங்கு வெற்றி பெற உதவி செய்தார். மேலும் மேலிடத்துடன் தற்போது அவர் நெருக்கமாக உள்ள நிலையில் திருவள்ளூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி எம்பியாக தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ செல்லக்குமார் உள்ளார். வரும் தேர்தலில் மீண்டும் அவரே களமிறங்கலாம் என கூறப்பட்ட நிலையில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கரூர்: கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. இவர் கரூர் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ளார். இந்த தொகுதியில் வரும் தேர்தலில் திமுக போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்ட்டது. ஜோதிமணி மேலிட தலைவர்களுடன் பேசி தொகுதியை பெற்ற நிலையில் தற்போது அவரே களமிறங்கி உள்ளார்.
கடலூர்: கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது திமுகவின் டிஆர்விஎஸ் ரமேஷ் எம்பியாக உள்ளார். தொகுதி பங்கீட்டின்போது இந்த தொகுதியை திமுக காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிய நிலையில் வேட்பாளராக டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத்தை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
சிவகங்கை: சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர் தற்போது அந்த தொகுதியில் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. இவர் விருதுநகர் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ளார். காங்கிரஸ் மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். மேலும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு இருந்தார். தற்போது மாணிக்கம் தாகூர் எம்பி ஆந்திரா மேலிட பொறுப்பாளராக உள்ள நிலையில் மீண்டும் விருதுநகரில் களமிறங்கி உள்ளார்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிட்டுள்ளனர். மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகனான இவர் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் அவருக்கே காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடும் நிலையில் 7 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications