மெஜாரிட்டி இல்லையென்றாலும்.. மோடிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு? தொங்கு சபை வந்தால் இதுதான் நடக்கும்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜகவை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறும் என்று பல்வேறு கணிப்புகள் சொன்னாலும் ஒரு சில கணிப்புகள் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் என்று கூறியுள்ளன. பாஜக என்டிஏ கூட்டணி 242 இடங்களை மட்டும் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளதாக அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
37 இடங்களில் இந்திய கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகள் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது போக 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு படுதோல்வி ஏற்படும், இந்தியா கூட்டணியே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டிபி லைவ் நியூஸ் சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
அதில் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி 255-290 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 207-241 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இது போக இந்தியாவில் லோக்சபா தேர்தல் 2024ல் எந்த கூட்டணியும் வெற்றிபெறாது, தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று சட்டா பஜார் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக தேர்தல் கணிப்புகளை எக்சிட் போல்களை விட சட்டா பஜார் துல்லியமாக கணிக்கும். மார்க்கெட் குழுவினர், பெட்டிங் குழுவினர், கணிப்புகளை மேற்கொள்ளும் பல்வேறு குழுவினர், மார்க்கெட்டில் பணம் போட்டு அதை வைத்து பெட்டிங் செய்வோர் என்று பலர் சேர்ந்து மேற்கொள்ளும் கணிப்புகள் ஆகும்.
பிளான் பி: பாஜகவின் பிளான் பற்றி பார்க்கும் முன் தேசிய அளவில், மாநில அளவில் தேர்தலுக்கு பின் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் குறித்து பார்க்கலாம். இப்போது 543 தொகுதிகள் நடாளுமன்றத்தில் உள்ளன. இதில் 272 எடுத்தால் மெஜாரிட்டி கிடைக்கும்.
ஒரு கட்சி இந்த மேஜிக் நம்பரை எடுக்கிறது என்றால் அதை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கலாம், அல்லது அந்த கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். சரி இப்போது தனியாக ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்றால் அவர்களின் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.
ஒரு கூட்டணிக்கு.. அதாவது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் அளவிற்கு இடம் இருந்தால் ஆட்சி அமைக்கலாம். சரி இப்போது இந்தியா கூட்டணி, பாஜக என்டிஏ கூட்டணி உள்ளது.
தனி மெஜாரிட்டி: பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இருந்தால் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். என்டிஏவிற்கு மெஜாரிட்டி இருந்தால் அவர்களும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். காங்கிரசுக்கும் மெஜாரிட்டி இருந்தால் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இந்தியா கூட்டணிக்கும் அதே விதிதான்.
பாஜக பிளான்: ஆனால் பாஜகவிடம் வேறு ஒரு பிளானும் உள்ளதாம். இப்போது காங்கிரஸ், பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்றாலும் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
இப்படிப்பட்ட சமயங்களில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் அதற்கு பதிலாக பாஜக தான்தான் தனியாக அதிக இடங்களை வென்ற கட்சி . அதனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளிக்க வேண்டும். ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உரிமை கோர வாய்ப்புகள் உள்ளதாம்.
கர்நாடகாவில் கடந்த தேர்தலுக்கும் முந்தைய தேர்தலில் தொங்கு சட்டசபை உருவான போது மெஜாரிட்டி இருந்த காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லை என்றாலும் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்தார்.
மாடல்: அதே மாடலை தேசிய அளவில் பாஜக செய்யலாம் என்கிறார்கள். குடியரசுத் தலைவர் இப்படி அழைக்கும் பட்சத்தில் பாஜக மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஆட்சி அமைத்து அதன்பின் இந்திய கூட்டணியை பாஜக உடைக்கலாம். காங்கிரஸ் எம்பிக்களை வாங்க முயற்சி செய்யலாம். ஏன் காங்கிரஸ் கட்சியையே உடைக்கலாம். திமுக போன்ற கட்சிகளின் ஆதரவை பெற முயற்சி செய்யலாம். ரிசார்ட் அரசியல் இதனால் தீவிரம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications