"வாய்ஸ் வருது வருது"- ரஜினிகாந்த் 'ஆன்மீக அரசியலை' ஆக்டிவேட் செய்த பாஜக- அடுத்த "ரவுண்டு" ஆரம்பம்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியலை மூட்டை கட்டி பரணில் வைத்திருந்தார். தற்போது மத்தியில் ஆளும் பாஜக, லோக்சபா தேர்தலுக்காக ரஜினிகாந்தின் பரணில் கிடந்த ஆன்மீக அரசியலை ஆக்டிவேட் செய்துவிட்டதாகவும் உத்தரப்பிரதேச சந்திப்புகளைப் போல இனி அடுத்தடுத்த சந்திப்புகளை எதிர்பார்க்கலாம் எனவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் சுமார் 40 ஆண்டுகளாக அரசியலுடன் இணைத்து பேசப்பட்டார். 1996 சட்டசபை தேர்தலில் மறைந்த தலைவர்கள் கருணாநிதி- மூப்பனாருடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, ஜெயலலிதாவுக்கு எதிரான அலையில் திமுக இயல்பாகவே வெல்ல, எல்லாம் ரஜினியின் வாய்ஸ்தான் காரணம் என அவரது அடிப்பொடிகள் புளகாங்கிதம் அடைந்தனர்.

அரசியல் பிரவேசம்: ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் வந்துவிட்டது; இந்த வெற்றிடத்தை நிரப்பப் போகிறேன் என தனிக் கட்சி அரசியல், ஆன்மீக அரசியல் என்றெல்லாம் பேசி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சரமாரியாக வாங்கி கட்டிக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். அதேநேரத்தில் பாஜக தமது ஆதாயத்துக்காகவே ரஜினிகாந்தை தனி கட்சி தொடங்க வைக்கிறது; ஆன்மீக அரசியல் என பேச வைக்கிறது என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அரசியலுக்கு குட்பை: ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் வெறுத்துப் போய், ஆளைவிட்டா போதும்.. எனக்கு அரசியலும் வேண்டாம்.. கட்சியும் வேண்டாம் என குட்பை சொல்லி ஒதுங்கிக் கொண்டார். அதாவது பாஜகவின் பொங்க சோறும் வேண்டாம்.. பூசாரித்தனமும் வேண்டாம் என்பதுதான் அந்த அறிவிப்பின் பின்னணி.
மீண்டும் ரஜினிகாந்த்: இந்த நிலையில் ஜெயிலர் படம் வெற்றி பெற்றதாலோ என்னவோ தமக்கு இன்னமும் தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கு இருகிறது என ரஜினிகாந்த் கணக்கு போட்டிருக்கலாம்; அல்லது ரஜினிகாந்துக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என பாஜக மனக்கணக்கு போட்டிருக்கலாம். இந்த கணக்குகளை அறுவடை செய்யும் வகையில் திரைமறைவு அரசியலுக்கு ரஜினிகாந்தை களமிறக்கி இருக்கிறது பாஜக எனவும் கூறப்படுகிறது.
ரஜினியின் சந்திப்புகள்: இதன் முதல் கட்டமாகவே கொங்கு மண்டலத்தின் மூத்த பாஜக தலைவரான ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை தேடிப் போய் சந்தித்தார் ரஜினிகாந்த். அதே கையோடு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் ரஜினி. பின்னர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
சந்திரபாபு, சரத்பவார்: அத்துடன் அடுத்ததாக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்ரையும் சந்திக்கப் போகிறாராம் ரஜினிகாந்த். இவை எல்லாம் ஏதோ ரஜினிகாந்த் நடத்திய/ நடத்தப் போகிற சந்திப்புகளாக கட்ந்து போக முடியாது; ஒவ்வொரு சந்திப்புக்கும் பின்னால் லோக்சபா தேர்தலை முன்வைத்து பாஜகவின் அரசியல் இருக்கிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
வருது வாய்ஸ்? : சர்வதேச அரசியலில் பொதுவாக அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்; மென்மை முகம் நார்வே என்கிற சொற்றொடர் உண்டு. அதேபோல இப்போது பாஜகவின் ஆன்மீக முகமாக ரஜினிகாந்த் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுக்க சாத்தியம் உண்டும் என்கின்றனர் அந்த சீனியர் பத்திரிகையாளர்கள். ஆனால் 1996-ல் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்த போது விழுந்த பனம் பழம், பின்னரும் வாஸ்ய் கொடுத்து பார்த்தும் ஒர்க் அவுட் ஆகாமல் போனது என்பதுதான் தமிழ்நாட்டின் சரித்திரம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications