ஜன.1-ல் மீண்டும் ஆதரவாளர்களுக்கு தரிசனம் தரும் சசிகலா- அட்லீஸ்ட் அதிரடியான அறிவிப்பாவது வருமா?
சென்னை: சசிகலா வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு நாளில் தமது ஆதரவாளர்களை சென்னை இல்லத்தில் சந்திக்க உள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக லெட்டர் பேடில் வெளிப்படுத்தி வரும் சசிகலா, இந்த புத்தாண்டு நாளிலாலவது ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடுவாரா? என்பது அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து சிறை மீண்ட சசிகலா, அதிமுகவில் கலகம் ஏற்படுத்துவார் என்பது பொதுவான யூகமாக இருந்தது. ஆனால் அப்படியான எந்த ஒரு முன்னெடுப்பையும் சசிகலா இதுவரை மேற்கொள்ளவில்லை.

அதிமுக தற்போது ஓபிஎஸ், சசிகலா, இபிஎஸ் கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஓபிஎஸ் கோஷ்டியானது சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாம் என்கிறது. இபிஎஸ் கோஷ்டியோ நாங்களே ஒரிஜனல் அதிமுக; சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட யாரையும் சேர்க்கப் போவதில்லை என்கிறது.
சசிகலா, ஒரு லெட்டர் பேடில் அதிமுகவின் பொதுச்செயலாளர் என தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுகிறார். முன்னர் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஆடியோ அரசியல் ஒன்றை சசிகலா நடத்திப் பார்த்தார். அதாவது அதிமுகவில் அதிருப்தி நிர்வாகிகள், அமமுக பிரமுகர்களை தொடர்பு கொண்டு பேசி அந்த ஆடியோ பதிவை ஊடகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் சசிகலா. இந்த ஆடியோ அரசியல் பெரிய அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.
இதனைத் தொடர்ந்து வழக்கமான அறிக்கை அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. அவ்வப்போது ஆன்மீக பயணம், புரட்சி பயணம் என்ற பெயரில் சில மாவட்டங்களுக்கு உலா சென்றுவிட்டு திரும்புவது; அங்கு பேட்டி கொடுப்பது என்பதுதான் சசிகலாவின் வாடிக்கை. அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளையும் தம்மால் சேர்த்துவிட முடியும்; அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை ஏற்றுக் கொள்வார்கள் என இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. டெல்லி பாஜக மேலிடம் கிடுக்குப்பிடி போட்டால் அதிமுக கோஷ்டிகள் அடங்கும் என்பதால் விஜயசாந்தி உள்ளிட்ட சில சோர்ஸ்கள் மூலம் தொடர்ந்து டெல்லிக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார் சசிகலா.
இன்னொரு பக்கம் அதிமுக தொடர்1பான வழக்குகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறாராம். தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அதிமுக வழக்கின் உத்தரவுக்குப் பிறகே சசிகலா அதிரடியாக முடிவெடுப்பார் என்கின்றனர் ஆதரவாளர்கள்.
இந்த பின்னணியில் வரும் 1-ந் தேதி புத்தாண்டு நாளில் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் சசிகலா தமது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் காலை 10 மணி முதல் ஆதரவாளர்களை சந்திக்கிறாராம் சசிகலா. அவருக்கு பரிசு பொருட்கள், பூங்கொத்துகள் தரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமும் பத்திரிகையாளர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்பு காட்டும் நிலையில் சசிகலா, ஆதரவாளர்களை சந்திக்கிறார். அப்போதைய செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக தொடர்பாக ஏதேனும் மிக முக்கியமான முடிவுகளை அல்லது அறிவிப்புகளை சசிகலா வெளியிடக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி கமிஷனின் குற்றச்சாட்டுகளுக்கும் கண்ணீர் மல்க சசிகலா விளக்கம் தந்து அனுதாபத்தைப் பெற முயற்சிக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications