போதை மாத்திரைகள் விற்பனை.. சென்னையை கிறுகிறுக்க வைக்கும் காதல் ஜோடி.. போலீஸில் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை அருகே போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெட்ரோ சிட்டியான சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை தலைவிரித்தாடுகிறது. கல்லூரிகள் மற்றும் ஐடி இளைஞர்கள் அதிகமுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கல்வி, வேலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் பலரும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். சென்னை மாநகர் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். கல்லூரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் பிற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சென்னையை முதலில் தேர்வு செய்கின்றனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா, கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற்று வருகின்றன. பணம் சம்பாதிப்பதற்காக இப்பகுதியில் பல்வேறு குழுக்கள் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
காவல் துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடின்றி இளைஞர்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காதல் ஜோடி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரும் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜய் என்றும், விபத்து காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விஜயின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 வலி நிவாரண மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா, 36 ஆயிரம் ரூபாய் பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை விவகாரத்தில் விஜயின் காதலி ஜாஸ்மினுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜாஸ்மினையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications