எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது!
சென்னை: பெங்களூர், மும்பை, சென்னை மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்கள் போதிய சமையல் எரிவாயு இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன அல்லது தங்களின் மெனுவை சுருக்கிக் கொண்டுள்ளன. பெரும்பாலான வணிக சமையலறைகள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே எரிவாயுவை இருப்பு வைத்திருக்கும் நிலையில், புதிய சிலிண்டர்கள் கிடைக்காததால் ஆன்லைன் ஆர்டர்களை ஏற்பதை உணவகங்கள் முற்றிலும் நிறுத்தியுள்ளன. குறிப்பாக மதிய உணவு மற்றும் இரவு உணவு நேரங்களில், விநியோக செயலிகளில் பல முக்கிய உணவகங்கள் "தற்போது கிடைக்கவில்லை" (Currently Unavailable) என்று காட்டப்படுகின்றன.

விநியோக ஊழியர்கள் பாதிப்பு
இந்தத் தட்டுப்பாட்டினால் தினசரி விநியோகத்தை நம்பியுள்ள கிக் (Gig) ஊழியர்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். உணவகங்கள் ஆர்டர்களை ஏற்காததால், டெலிவரி பார்ட்னர்களுக்கு மிகக் குறைவான ரைடு கோரிக்கைகளே வருகின்றன. வழக்கமாக உணவகங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விநியோக ஊழியர்களின் பைக்குகள் வரிசையாகக் காத்து நிற்கும். ஆனால் தற்போது அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெங்களூரின் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் முக்கிய உணவக வீதிகளில் முன்பை விட மிகக் குறைந்த அளவிலான ஊழியர்களே இன்று பணியில் உள்ளனர். சென்னையிலும் குறையத் தொடங்கியுள்ளது. எந்த வேலையும் கிடைக்காமல் இதுபோன்ற வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த அவர்களுக்கு, எங்கோ நடக்கும் போர் இடியை இறக்கியுள்ளது.
தட்டுப்பாட்டிற்கான காரணம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். தற்போது டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிலைமை ஓரளவுக்கு சீராக இருந்தாலும், இந்தத் தட்டுப்பாடு நீடித்தால் அங்கேயும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.
ஸ்டவ் சேல்ஸ் அதிகரிப்பு
சில உணவகங்கள் இண்டக்ஷன் அடுப்புகள் (Induction) மற்றும் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்க முயற்சித்தாலும், பெரிய அளவிலான உணவைத் தயாரிக்க அவை போதுமானதாக இல்லை. மேலும், க்யூ-காமர்ஸ் (Quick commerce) செயலிகளில் இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளதால் அங்கும் கையிருப்பு குறைந்து வருகிறது. உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு அவசர கடிதங்களை எழுதியுள்ளன.
இந்த நிலைமை நீடித்தால், உணவு விநியோகத் துறையைச் சார்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவைகளிலும் பெரும் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications