"நான் துவாரகா கதைக்கிறேன் அண்ணா.." தமிழக தலைவர்களிடம் பேசிய அந்த ஈழத் தமிழ் பெண் பிரபாகரன் மகள்தானா?
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் வெளியான வீடியோ பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரிடமும் துவாரகா பேசியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கமே அழிக்கப்பட்டது. அப்போரில் பிரபாகரன் உயிரிழந்தார் எனவும் அறிவிக்கப்பட்டது. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட படங்களும் வெளியாகி இருந்தன.

நெடுமாறன் அறிவிப்பு: ஆனால் அண்மை காலமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; பிரபாகரன் குடும்பத்தில் மனைவி மதிவதினி, மகள் துவாரகா உயிருடன் இருக்கின்றனர்; வெளிநாடுகளில் இருக்கின்றனர் என்றெல்லாம் பல தகவல்கள் பகிரப்பட்டன. பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க உச்சகட்ட பரபரப்பும் ஏற்பட்டது.
வீடியோ வெளியீடு: இந்நிலையில் பிரபாகரன் மகள் துவாரகா என அறிவித்துக்கொள்ளும் பெண் ஒருவர் நேற்று மாவீரர் நாள் உரையை நிகழ்த்தி இருக்கிறார். இவர்தான் உண்மையான துவாரகா என ஒருதரப்பும் இல்லை இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வீடியோ என இன்னொரு தரப்பும் வாதிட்டு வருகிறது.
துவாரகா கதைக்கிறேன்: இதனிடையே கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஈழ விடுதலைக்கு ஆதரவு தரும் தலைவர்கள் பலரையும் பிரபாகரன் மகள் 'துவாரகா' என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் பேசி இருக்கிறார். அவர்களிடம் தாமே துவாரகா என ஆணித்தரமாக கூறி நவம்பர் 27-ந் தேதி தாம் உரையாற்ற இருக்கிறேன் எனவும் கூறினாராம். ஆனால் பெரும்பாலான ஈழ ஆதரவு தலைவர்கள், நீங்கள்தான் துவாரகா என எப்படி நம்புவது என கேள்வி கேட்டும் நிராகரித்தும் விட்டனராம்.
உறுதி தந்த அரசியல் தலைகள்: அதேநேரத்தில் ஒருசிலர், நீங்கள் வீடியோவில் பேசுங்கள்.. அதன் உறுதித்தன்மையை உறுதி செய்து உண்மை என தெரியவந்தால் பகிரங்கமாக அறிவிக்கிறோம் "தங்கச்சி" எனவும் கூறியிருக்கின்றனர். இன்னும் சில செயற்பாட்டாளர்கள், முந்திக் கொண்டு செய்தியாளர்களிடம் பிரபாகரன் மகள் பேசப் போகிறார் எனவும் அறிவித்திருந்தனர். துவாரகா என்ற பெண் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் பேசியது உறுதியானதாகவே தெரிகிறது; ஆனால் அவர் துவாரகாதான என்பது யாருக்கும் தெரியாது. இன்னொரு பக்கம் துவாரகா என தம்மை அழைத்துக் கொள்கிற பெண், நண்டு சிண்டு ரேஞ்சில் இருக்கும் சில செயற்பாட்டாளர்களிடம் எல்லாமா பேசினார்? என்கிற கேள்விதான் பெரும் சந்தேகமாக இருக்கிறது என்கின்றனர் ஈழ ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications