புலிகளின் தலைவர் பிரபாகரனின் 37-வது திருமண நாள்! 'பாலகன்' பாலச்சந்திரனுக்கு இன்று 25வது பிறந்த நாள்!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 37 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர் 1-ந் தேதியன்று தமிழகத்தின் திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற்றது. பிரபாகரனின் மாப்பிள்ளை தோழராக இருந்த கே.பி. எனும் குமரன் பத்நாபன் இன்றும் கிளிநொச்சியில் சிறார் இல்லங்களை பராமரித்து வருகிறார். இன்றைய தினம்தான் சிங்கள ராணுவத்தால் உயிருடன் கைது செய்யப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனின் கடைசி மகன் பாலகன் பாலச்சந்திரனின் 25-வது பிறந்த நாள்.
1980களின் தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத் தமிழர்களின் செல்வாக்கை பெற்றுக் கொண்டிருந்த காலம். தமிழகத்தில் சென்னையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் என பலரும் தங்கி இருந்தனர். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்ள அந்த இயக்கத்துக்குள் தடை இருந்தது.
1984-ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் சிங்கள அரசுக்கு எதிராக மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் 15 நாட்கள் நீடித்தது. ஆனால் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனா இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்.

யாழ்ப்பாணம்- தமிழகம்
இதனையடுத்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து செத்து மடிவதை அனுமதிக்க முடியாது என கூறி அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பாசறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவ, மாணவியரின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த விடுதலைப் புலிகள் அதே கையோடு தமிழ்நாட்டுக்கும் அவர்களை அனுப்பி வைத்தனர். யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவிகளான ஜெயா, லலிதா, வினோஜா, மதிவதனி ஆகியோர் ஆன்டன் பாலசிங்கம் - அடேல் தம்பதியினரின் சென்னை வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

பிரபாகரன் - மதிவதனி திருமணம்
இங்கிருந்துதான் பிரபாகரன் - மதிவதனியின் காதலும் தொடங்கியது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. தாலியை இயக்கத்தின் பணத்தில் பெறாமல் மாமாவிடம் பணம் பெற்று வாங்கினார் பிரபாகரன். மேலும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்ள இருந்த தடையும் நீங்கியது. திருப்போரூர் முருகன் கோவிலில் மிக எளிமையாக 37 ஆன்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பிரபாகரன்- மதிவதனி திருமணம் நடைபெற்றது.

கே.பி எனும் குமரன் பத்மநாபன்
அப்போது பிரபாகரனின் மாப்பிள்ளைத் தோழராக இருந்தவர் குமரன் பத்மநாபன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்து உலக நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கே.பி.தான் குமரன் பத்மநாபன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இறுதி காலங்களிலும் அதன் பின்னரும் கே.பி. குறித்து முரண்பட்ட தகவல்கள் வருவது உண்டு.

பாலச்சந்திரன் பிறந்த நாள்
பிரபாகரன்- மதிவதனி தம்பதியினர் பெற்றெடுத்த சார்லஸ் அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் ஈகம் செய்தவர்கள். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களப் படையிடம் சரணடைய சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகளில் சார்லஸ் அன்ரனியும் ஒருவர். யுத்த களத்தில் மதிவதனியும் துவாரகாவும் உயிரிழந்தனர். 2009-ல் பச்சிளம் பாலகனாக இருந்த பாலச்சந்திரன் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் இன்றளவும் உலகத் தமிழர்கள் நெஞ்சில் ஆறா ரணமாக இருந்து வருகிறது. அந்த பச்சிளம் பாலகன், பாலச்சந்திரனுக்கும் இன்றுதான் பிறந்த நாள். பிரபாகரன் மதிவதனி பாலச்சந்திரனுக்கு இன்று 25-வது பிறந்த நாள்!












Click it and Unblock the Notifications